Last Updated : 01 Apr, 2015 02:41 PM

 

Published : 01 Apr 2015 02:41 PM
Last Updated : 01 Apr 2015 02:41 PM

ஏமனில் இருந்து முதற்கட்டமாக 349 இந்தியர்கள் மீட்பு

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் பணிபுரிந்து வரும் 349 இந்தியர்களை ஐ.என்.எஸ். சுமித்ரா போர்க் கப்பல் மீட்டுக்கொண்டு ஏடன் கடற்படைத் தளத்திலிருந்து புறப்பட்டது.

ஷியா கிளர்ச்சிப் படைக்கு எதிராக, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய கூட்டணி நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏமனில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏமனின் துறைமுக நகரான ஏடனில் சிக்கி கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக சென்ற ஐ.என்.எஸ். சுமித்ரா கடற்படைக் கப்பல் 349 இந்தியர்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கப்பலில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 220 ஆண்கள், 101 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் என 349 பேருடன் பாதுகாப்பாக புறப்பட்டது. மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் ஏமனின் ஜிபவுத்தி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து விமான மூலமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறும்போது, "ஏமனில் சிகியுள்ளவர்கள் மீட்க முதற்கட்டமாக ஐ.என்.எஸ்.சுமித்ரா கப்பல் ஏடன் துறைமுகம் சென்றடைந்தது. அங்கு 350 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் எஞ்சியுள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

ஏமனில் 4000-த்துக்கு அதிகமான இந்தியர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் செவிலியர்கள் ஆவர். பலதரப்பினர் போர் சூழல் அதிகம் இருக்கும் ஏடன் துறைமுகப் பகுதி, தலைநகர் சனா மற்றும் பதற்றமான அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.

இவர்களை மீட்க ஐ.என்.எஸ். கவரத்தி, கோரல்ஸ், மற்றும் ஐ.என்.எஸ். சுமித்ரா, உள்ளிட்ட போர்க் கப்பல்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் மூலம் பல்வேறுக் குழுக்கள் அமைத்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

சவுதி மன்னருடன் பிரதமர் பேச்சு:

ஏமனில் சவுதி அரேபியா நடத்தும் போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் ஆஸிஸை நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், ஏமனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை தனது அரசு செய்துள்ளதாகவும், மீட்பு பணிக்கு ஒத்துழைக்குமாறு அவரை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாகவும் பிரதமஎ அலுவலகம் தெரிவித்துள்ளது.

விமானம் பறக்க அனுமதி:

இதனிடையே டெல்லியில் இருந்து 180 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் ஏ320 ரக விமானமும் மஸ்கட் வழியாக ஏமன் தலைநகர் சானாவுக்கு புறப்பட்டது.

சானாவில் தினமும் 3 மணி நேரம் விமானம் இயக்குவதற்கு அதிகாரிகளிடம் இந்தியா அனுமதி பெற்றுள்ள நிலையில் இந்த விமானத்தை இந்தியா அனுப்பி வைத்தது. இந்த விமானத்தின் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று அவர்களது உறவினர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x