Published : 25 Feb 2015 09:39 AM
Last Updated : 25 Feb 2015 09:39 AM
அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 27-ம் தேதி முதல் மார்ச் 2 வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாநில வேலைவாய்ப்பு பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் 652 கணினி பயிற்றுநர் காலியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 27-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. இதுபற்றிய விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத் தால் பரிந்துரை செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் அழைப்புக் கடிதம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான படிவங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து குறிப்பிட்ட மையங்களில் குறிப்பிட்ட தேதிகளில் கலந்துகொள்ள வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழலில், எதிர்பாராத காரணங்களால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்கள் மட்டும் அதற்கான காரணங்களை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பித்து கடைசி நாளான மார்ச் 2-ம் தேதி கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT