Published : 13 Feb 2015 10:57 AM
Last Updated : 13 Feb 2015 10:57 AM
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், தனியார் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் தனியார் நிலக்கரி சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு சேமித்து வைக்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிகளை, தனியார் அனல் மின் நிலையங்கள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் பாதிரிவேடு பகுதிகளில் உள்ள 11 தனியார் அனல் மின் நிலையங்களுக்கு நாள் தோறும் 600 லாரிகளில் நிலக்கரி ஏற்றிச் செல்லப்படுகிறது. அந்த லாரிகளில் அதிகளவில் நிலக்கரி ஏற்றப்பட்டு வந்தன. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக எடைகளை லாரிகளில் ஏற்றக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இதனால், அதிக எடைகளில் நிலக்கரி ஏற்ற முடியாததால், லாரிகளுக்கு கிடைக்கும் வருவாய் கணிசமாக குறைந்துவிட்டது. ஆகவே, டன் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் வாடகையை அதிகரித்து தரவேண்டும் எனக் கோரி, கடந்த 10-ம் தேதி மாலை முதல், லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால், தனியார் அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி பாதிப்படைய வாய்ப்பிருந்தது. இதையடுத்து, நிலக்கரி எடுத்துச் செல்லும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சென்னை, எண்ணூர் துறைமுகம் டிப்பர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுக்கு இடையே நேற்று காலை, மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், வாடகையை அதிகரிக்க ஒப்பந்ததாரர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். அதனை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு, நேற்று மாலை முதல், லாரிகள் நிலக்கரியை ஏற்றிச் செல்ல தொடங்கின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT