Last Updated : 08 Feb, 2015 10:01 AM

 

Published : 08 Feb 2015 10:01 AM
Last Updated : 08 Feb 2015 10:01 AM

பெங்களூருவில் நுழைய தொகாடியா முயற்சி: விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய போலீஸார்

தடையை மீறி பெங்களூருவுக்குள் நுழைய முயன்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியாவை போலீஸார் நேற்று விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர். அவரை பலத்த பாதுகாப்புடன் ஓசூருக்கு அனுப்பிவைத்தனர்.

பெங்களூருவில் இன்று நடைபெறும் இந்து மாநாட்டில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா சிறப்புரையாற்றவிருந்தார். அதைத் தொடர்ந்து 11-ம் தேதி நடைபெறவிருந்த வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் பிரவீண் தொகாடியா, பெங்களூருவுக்குள் பிப்ரவரி 5 முதல் 11-ம் தேதி வரை நுழைய தடை விதிக்கப்படுகிறது என்று போலீஸார் உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், “அமைதியை சீர்குலைக்க முயன்றதாக தொகாடியா மீது 19 வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது” என்று உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, விஷ்வ‌ இந்து பரிஷத் அமைப்பின் கர்நாடக மாநில முக்கிய தலைவர்களில் ஒருவரான மஞ்சுநாத் கவுடா கூறும்போது, “பிரவீண் தொகாடியா, இந்து மாநாட்டில் 2 மணி நேரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுவார்” என்று தெரிவித்தார்.

வீடியோ கான்பரன்சிங்கில் பேச தடை

பெங்களூரு மாநகர கூடுதல் காவல் ஆணையர் (சட்டம், ஒழுங்கு) அலோக் குமார் கூறும்போது, “பிரவீண் தொகாடியா மீதான தடை வரும் 11-ம் தேதி வரை அமலில் இருக்கும். வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரவீண் தொகாடியா பேசினால், அவர் மீது நடவடிக்கை எடுப்போம். விழா ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வோம்” என்றார்.

காவல் துறையின் இந்நடவடிக்கையை கண்டித்தும், மாநில காங்கிரஸ் அரசை கண்டித்தும் பாஜக இளைஞரணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.

தடையை மீறிய தொகாடியா

இதற்கிடையே பெங்களூருவுக்குள் நுழைய போலீஸார் விதித்த தடையை மீறி, பிரவீண் தொகாடியா நேற்று மதியம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அங்கு சென்ற மாநகர கூடுதல் காவல் ஆணையர் அலோக் குமார் தலைமையிலான போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து தொகாடியாவை ஓசூருக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் ஓசூருக்கு செல்லும் வழியில் கர்நாடக - தமிழக எல்லையில் தொகாடியாவை போலீஸார் இறக்கிவிட்டனர். அங்கிருந்து வேறு கார் மூலம் சென்ற அவர், இன்று ஓசூரில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x