Last Updated : 06 Feb, 2015 09:24 PM

 

Published : 06 Feb 2015 09:24 PM
Last Updated : 06 Feb 2015 09:24 PM

நல்லாட்சியா... தர்ணா ஆட்சியா? - ஆம் ஆத்மி மீது அருண் ஜேட்லி விமர்சனம்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தர்ணா நடத்துவதில் சிறந்தவர்களை தேர்வு செய்வதா அல்லது நல்லாட்சி வழங்குபவர்களை தேர்வு செய்வதா என்பது மக்களின் கையில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் முகம் டெல்லி. எனவே டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் இந்திய அளவிலும் உலகளாவிய அளவிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த 8 மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நல்லாட்சியை வழங்கியுள்ளது. ஊழல் விவகாரங்கள் குறித்து சிறு சலசலப்புகூட எழவில்லை.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. அந்தக் கட்சியின் ஊழல்களுக்கு மக்கள் அளித்த தண்டனை இது. இப்போதைய நிலையில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சாலை, தெருக்களில் தர்ணா நடத்துவதில்தான் சிறந்தவர்கள், ஆட்சி நடத்துவதில் அல்ல. அவர்களின் ஆட்சி நிர்வாகத்தை மக்கள் ஏற்கெனவே ஒருமுறை அனுபவித்துவிட்டனர். எனவே ஆம் ஆத்மியை தேர்வு செய்வதா அல்லது நல்லாட்சி தரும் பாஜகவை தேர்வு செய்வதா என்பது மக்களின் பொறுப்பு.

தேர்தல் நிதி திரட்டியதில் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது. ஆனால் அந்த முறைகேடுகளை மறைக்க அதன் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மக்களை திசைதிருப்பும் வகையில் பேட்டி அளித்து வருகிறார்.

பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடி கடந்த 40 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிர்வாகத் திறமை ஊரறிந்த உண்மை. எனவே டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x