Published : 08 Feb 2015 04:07 PM
Last Updated : 08 Feb 2015 04:07 PM
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் பாஜக பிளவு ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை நிராகரித்த பாஜக, அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு நிதிஷ் குமாரின் பதவி வெறியே காரணம் என்று கூறியுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறும்போது, “இந்த ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் காரணம் நிதிஷ் குமாரும் அவரது பதவி வெறியும்தான். இது ஐக்கிய ஜனதா தளத்தின் உட்கட்சி பூசல். ஆனால், எங்கள் மீது அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அவர்கள் உருவாக்கிய நெருக்கடியை அவர்களாலேயே தீர்க்க முடியவில்லை என்பதே விஷயம்.
மக்களவைத் தேர்தலில் தோல்வி தழுவியதையடுத்து மகாதலித்தான ஜிதன் மாஞ்சியை முதல்வராக்கினார். இப்போது அவரே முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.” என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பாஸ்வானும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் பிரச்சினைகளுக்கு நிதிஷ் குமார் காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.
"நிதிஷ் குமார்தான் முதல்வராக இருந்தார். அவரை யாரும் வெளியேற்றி விடவில்லை, அவர்தான் மகாதலித் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி மாஞ்சியை முதல்வராக்கினார். அவர் தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே, அந்தக் கட்சி மாஞ்சி தலைமையில்தான் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் வேறு இயற்றினர்.
இடையில் என்னவாயிற்று? மாஞ்ஜி, கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டாரா என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக-வின் தூண்டுதலின் பேரில்தான் பிஹாரில் ஆட்சியைக் கலைக்க மாஞ்சி பரிந்துரை செய்துள்ளார் என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT