Last Updated : 19 Feb, 2015 04:44 PM

 

Published : 19 Feb 2015 04:44 PM
Last Updated : 19 Feb 2015 04:44 PM

நலம் தரும் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர்

ஐவகை நிறத்துடன் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என இங்குள்ள சிவனுக்குத் திருநாமம். அமர் நீதியார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் ஆண்டார் என்பது மற்றொரு திருநாமம்.

அகத்தியருக்குத் தம் திருமணக் கோலத்தைக் காட்டி அருளியமையால் கலியாண சுந்தரர் என்பதும் இவரது திருநாமம். பேரழகு கொண்டவரானதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் எனவும் பெயர் கொண்டு விளங்குகிறார்.

அகத்தியருக்குத் தன் திருமணக் காட்சியைக் காட்டிய சிவபெருமானின் கோலத்தை இன்றும் மூல லிங்கத்தின் பின் கருவறையில் காணலாம். அந்தக் கருவறை ஈசனின் பெயர் கல்யாண சுந்தரேஸ்வரர், அம்பிகையின் பெயர் கிரிசுந்தரி.

சிவாலயங்களில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற இறைவன், இறைவியின் திருக்கல்யாணத்தை நடத்துவார்கள். ஆனால் இறைவனோ தானே மனமுவந்து இங்கேயே திருக்கல்யாணக் காட்சியைக் காணச் செய்ததால், இந்தத் திருத்தலத்து ஈச்னை இருந்த இடத்தில் இருந்தே பக்தர்கள் வேண்டிக்கொண்டால், அவரவர் இல்லத்தில் திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை.

சமயக் குரவர்கள் பாடிய தலம்

பன்னிரு திருமுறையில் கிட்டத்தட்ட அனைத்திலும் பாடல் பெற்ற தலமாக இந்நல்லூர் விளங்குகிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர், சேக்கிழார் ஆகியோர் இத்திருத்தலம் குறித்துப் பாடியுள்ளனர்.

மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில் என்ற வழக்கு உண்டு. கும்பகோண மகாமகக் குளத்தில் நீராடுவதால் என்ன புண்ணியம் கிட்டுமோ அதே புண்ணியம் நல்லூரிலுள்ள திருக்குளத்தில் மகத்தன்று நீராடினாலும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

இத்திருக்கோயிலில் மாசி மாத உற்சவம் இவ்வாண்டு 23.02.15 திங்கட் கிழமையன்று தொடங்கி 06.03.15 வெள்ளிக்கிழமையன்று நிறைவுறுகிறது. திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 24- வது குரு மகாசந்நிதானம் ஸ்ரீ லஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருவுளப்படி இவ்விழா நடைபெற உள்ளது.

சப்த சாகரம்

திருமாலுடன் நடந்த போட்டியில் சிவபிரானது முடியைக் கண்டேன் என்று பிரம்மதேவன் பொய்யுரைத்தார். அதனால் உண்டான தீவினையைப் போக்கிக்கொள்ள, இந்தச் சுந்தரகிரிக்கு முன்னால் தன் பெயரால் பொய்கை ஒன்றை நிறுவி நீராடிப் பெருமானைப் பூசித்துப் பேறு பெற்றார்.

பிரம்மன் நீராடிய இந்த இடம் பிரம்ம தீர்த்தம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது பின்னர் சப்தசாகரம் அதாவது ஏழு கடல் எனப் பெயர் பெற்றது. இத்தலத்தின் தல விருட்சம் வில்வ மரம்.

கல்வெட்டு ஆதாரங்கள்

செங்கல்லால் கட்டப்பட்ட மாடக் கோயிலாய் இக்கோயில் உத்தம சோழன் காலத்தில் கற்றளியாகக் கட்டப்பட்டது. இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட இருபத்தி மூன்று கல்வெட்டுகளுள் இருபத்தி இரண்டு சோழர்களுடையவை. ஒன்று மட்டும் ஹொய்சாள மன்னனான வீரராம நாதனின் இருபத்தி மூன்று ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு.

தட்சிண காளி உறையும் இந்நல்லூரில் காளி பிள்ளைப் பேறு அளிப்பவளாக அழகுடன் காட்சி அளிக்கிறாள். கல்யாண சுந்தரரோ கல்யாண பாக்கியம் அளிப்பவராக உள்ளார்.

வண்ணமயமான இறைவன் என்னும் அடைமொழி சோழ வள நாட்டில் உள்ள திருநல்லூர் சிவத்தலத்தின் மூலவருக்குக் கச்சிதமாகப் பொருந்தும். இந்தத் திருத்தலத்தில் சிவ காட்சி ரூபங்கள் நிறம் மாறி, மாறித் தோன்றுகின்றனவாம்.

இத்திருத்தலத்தில் உள்ள அருள்மிகு கலியாண சுந்தரேசுவரர் சுயம்பு லிங்கமானவர். தினமும் பல்வேறு நிறங்களில் இவர் காட்சி அளிக்கிறார். முதல் ஆறு நாழிகைக்குத் தாமிர நிறம், அடுத்த ஆறு நாழிகைக்கு, இளம் சிவப்பு, இதனைத் தொடர்ந்து சொக்கத் தங்கம், பச்சை எனத் தொடரும் வண்ண மாறுதலில் கடைசியாக இன்ன நிறம் எனக் குறிப்பிட முடியாத அபூர்வ நிறமாக மாறிப் பஞ்சவர்ணமாகத் தோற்றம் அளிக்கிறார் சிவன்.

வரலாற்றுச் சிறப்பு

திருநல்லுர் ஸ்ரீ கிரிசுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புக் கொண்டது. திருவானைக்கா சம்புலிங்கப் பெருமானை முற்பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்டு, அடுத்த பிறவியில் கோச்செங்கட் சோழனாகப் பிறந்தான் என்கிறது தல வரலாறு.

இவன் சிவபிரானுக்கு யானை ஏறாத மாடமாக எழுபது கோயில்களை அமைத்தான். அந்த வரிசையில் பெரிய அளவில் அமைந்த கோயிலே திருநல்லூர் பெருங்கோயிலாகும்.

இத்தலத்துப் பெருமானைத் திருநல்லூர் உடைய நாயனார் என்றும், தல விநாயகரை அகம்படி விநாயகர் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐவகை நிறத்துடன் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என இங்குள்ள சிவனுக்குத் திருநாமம். அமர் நீதியார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் ஆண்டார் என்பது மற்றொரு திருநாமம். அகத்தியருக்குத் தம் திருமணக் கோலத்தைக் காட்டி அருளியமையால் கலியாண சுந்தரர் என்பதும் இவரது திருநாமம். பேரழகு கொண்டவரானதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் எனவும் பெயர் கொண்டு விளங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x