Last Updated : 04 Feb, 2015 07:28 PM

 

Published : 04 Feb 2015 07:28 PM
Last Updated : 04 Feb 2015 07:28 PM

பொது வாழ்க்கையில் பொய்களுக்கு இடமில்லை: பெயரைக் குறிப்பிடாமல் ஆம் ஆத்மி மீது மோடி தாக்கு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஆம் ஆத்மி கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் அக்கட்சியை குறிவைத்து தாக்கிப் பேசினார்.

தனது வழக்கமான ‘வளர்ச்சி’ பிரச்சாரத்தை இன்றும் மேற்கொண்ட மோடி, கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற செய்திகளை புறமொதுக்கி, பாஜக-வுக்கே வெற்றி என்றார்.

ஆம் ஆத்மி கட்சியை பெயர் குறிப்பிடாமல் தாக்கிப் பேசிய மோடி, அந்தக் கட்சிக்கு வரும் நன்கொடை விவகாரத்தைக் குறிப்பிட்டார். அதாவது, ஆம் ஆத்மி கட்சிக்கு தான் நன்கொடை கொடுத்தேனா என்று தனது நண்பர்களே கேட்டதாகவும், தான் அதனை சரிபார்த்தபோது, “மகாத்மா காந்தி, ஒபாமா ஆகியோரும் அவர்களுக்கு நன்கொடை அளித்திருப்பது கண்டு ஆச்சரியமடைந்தேன்.” என்று நையாண்டி தொனியில் பேசினார் மோடி.

மேலும், “அவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள்? பொது வாழ்க்கையில் இத்தகைய பொய்களுக்கு இடமில்லை.” என்று கடுமையாக ஆம் ஆத்மி பெயரைக் குறிப்பிடாமல் பேசியுள்ளார்.

அதே போல் கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி பெரும்பான்மை பெறும் என்று எழுந்துள்ள செய்திகளைப் பற்றி நரேந்திர மோடி கூறுகையில், “லோக்சபா தேர்தலின் போது நான் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் கருத்துக் கணிப்பு நான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைவேன் என்று கூறியது. எனக்கு அவர்கள் யார் என்றே தெரியாது.” என்றார்.

மேலும், தனது சொந்த நாடாளுமன்ற தொகுதியையே வெல்ல முடியாத ஒருவரை மிகப்பெரிய ஒருவராக சித்திரப்படுத்துவது எப்படி? என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் பெயரைக் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார்.

“என்னுடைய அரசியல் பாணி ஒன்றே ஒன்றுதான், என்னிடம் ஒரு மந்திரமே உள்ளது, ஒரு கவனமே உள்ளது, அது வளர்ச்சி. இதற்கு அர்த்தம் என்னவெனில் ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுத்துவது என்பதே. அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும். அவர்கள் பெற்றோர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டும். திடமான வீடுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே.”

இவ்வாறு பேசினார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x