Last Updated : 08 Jan, 2015 03:51 PM

 

Published : 08 Jan 2015 03:51 PM
Last Updated : 08 Jan 2015 03:51 PM

என்னுடைய முதல் போட்டியாக சிட்னி டெஸ்ட்டையே கருதுகிறேன்: சதமடித்த ராகுல்

மெல்போர்னில் முதல் போட்டியை ஆடிய லோகேஷ் ராகுல், அங்கு சோபிக்கவில்லை, அதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், இன்று அவர் சிட்னியில் 110 ரன்களை எடுத்தார். 2-வது டெஸ்ட் போட்டியிலேயே அவர் சதம் கண்டார். ஆனால் இதுவே தனது முதல் போட்டி என்று நினைத்துக் களமிறங்கியதாக அவர் தெரிவித்தார்.

“மெல்போர்னில் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப ஆட முடியாமல் போனது பெரும் அதிருப்தியை அளித்தது. அதனால் இதுவே எனது முதல் டெஸ்ட் போட்டி என்று நினைத்து களமிறங்கினேன். நான் ஆடிய விதம் எனக்கு முழு திருப்தி அளிக்கிறது.

தொடக்க வீரராகக் களமிறங்கியதால் கால அவகாசம் இருந்தது. சிறிது நேரம் பந்துகளை நன்றாகப் பார்த்து தொடக்க பதட்ட கணங்களைக் கடந்து வர முடிந்தது. பிட்ச் மந்தமாக இருந்தது, ஆனால் ஆஸ்திரேலிய வீச்சாளர்கள் பேட்டிங்கை கடினமாக்கினர். ரன்களை வறளச்செய்தனர்.

முதல் 2 மணி நேரத்தைக் கடத்தி விட்டால் உணவு இடைவேளைக்குப் பிறகு ரன்கள் எடுக்க முடியும் என்று என்னை நான் சமாதானப் படுத்திக் கொண்டு ஆடினேன்.

சதம் அடித்தது பற்றி எனக்கு பெருமையாக இருந்தது என்பதை விட அது எனக்கு நிம்மதியை அளித்தது என்றே கூறுவேன். ஸ்லிப்பில் ஒரு எளிதான கேட்சை கோட்டை விட்டேன், இதனால் பேட்டிங்கில் உறுதிப்பாடு அதிகமானது.

பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர், ரவிசாஸ்திரி ஆகியோர் ஆதரவு அளித்தனர். அவுட் ஆன பிறகும், முன்னதாக வலைப்பயிற்சியிலும் இருவரும் எனக்கு நிறைய ஊக்க அறிவுரைகளை வழங்கினர்.

சக வீரர்கள் அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தனர், சர்வதேச கிரிக்கெட்டில் முதல் போட்டி என்பது எதிர்பார்த்தது போல் அமையாது எனவே அடுத்த போட்டிக்குத் தயாராகு சவால்களை எதிர்கொள்ள உறுதியாக இரு என்று என்னிடம் அவர்கள் கூறினர்.

நாங்கள் பெங்களூரில் பயிற்சி மேற்கொள்ளும் போது ராகுல் திராவிட் சர்வதேச கிரிக்கெட் இல்லாத தருணங்களில் எங்களுடன் பயிற்சி செய்வார். அப்போது அவருடன் நிறைய நாங்கள் பேசியுள்ளோம், அவர் மிகவும் அன்பான மனிதர், சளைக்காமல் தன் அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்வார். எங்களுக்கு அவர்தான் ரோல் மாடல்.

பேட்டிங்கில் களமிறங்கும் போது நான் விட்ட கேட்ச் என் மனதில் நிலையாக இருந்தது. அதனால் நான் ஒரு தவறான ஷாட்டை ஆடியிருக்க முடியும், ஆனால், நேரம் ஆக ஆக அது மனதிலிருந்து மறைந்தது.

புல்ஷாட்டில் ஆட்டமிழந்தேன், இந்திய பிட்ச்களில் புல்ஷாட்டை ஆடுவேன், ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக அமைந்தது, பவுலர்கள் வேகம் கூடுதலாக வீசுகின்றனர், பிட்சில் சீரான பவுன்ஸ் உள்ளது. எப்படியும் அந்த ஷாட்டை மேலும் திறம்பட ஆட பயிற்சி செய்வேன் என்பது உறுதி.

நாளை தேநீர் இடைவேளை வரை நாம் பேட்டிங் செய்தால் பாதுகாப்பான நிலைக்குச் செல்ல முடியும்.”

இவ்வாறு கூறினார் சதநாயகன் ராகுல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x