Last Updated : 12 Jan, 2015 09:13 PM

 

Published : 12 Jan 2015 09:13 PM
Last Updated : 12 Jan 2015 09:13 PM

ஜல்லிகட்டு மீதான தடை தொடர்கிறது: டெல்லி வந்த தமிழக அதிகாரிகள் முயற்சி தோல்வி

ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கும் முயற்சியில் மத்திய அரசு அதிகாரிகளுடன் டெல்லியில் சந்திப்பு நடத்திய தமிழக அதிகாரிகளின் பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், அதன் மீதான உச்ச நீதிமன்றத்தின் தடை தொடரும் நிலை உருவாகி உள்ளது.

தமிழர் திருநாளான பொங்கலில் நடைபெறும் ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கும் பொருட்டு மத்திய அரசின் அதிகாரிகளை சந்திக்க தமிழக அரசின் அதிகாரிகள் குழு இன்று டெல்லி வந்தனர். அதில், தமிழகத்தின் கால்நடைத்துறையின் செயலாளர் விஜயகுமார், இயக்குநர் ஆபிரஹாம் மற்றும் கூடுதல் இயக்குநர் அயூப் ஆகிய மூவர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள், டெல்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர் அசோக் லவாசா மற்றும் கூடுதல் செயலாளர் எம்.பாண்டே ஆகிய இரு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தமிழக அதிகாரிகள் மாலை விமானத்தில் சென்னை திரும்பினர்.

இதில், ஜல்லிகட்டு நடத்த தடையாக இருக்கும் விலங்குகளின் பட்டியலில் காளை மாடுகளை நீக்க வேண்டி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், இதை கடைசி நேரத்தில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என மத்திய அரசின் அதிகாரிகள் கைவிரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஜல்லிகட்டு மீதான தடையை நீக்குவதில் எந்த முன்னேற்றமும் கிட்டவில்லை என்பதால், தமிழக அதிகாரிகள் செய்தியாளர்களிடமும் பேசாமல் கிளம்பி விட்டனர்.

இது குறித்து ’தி இந்து’விடம் அம் மத்திய அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ’கடந்த 2011-ல் மத்திய அரசால் பழக்கப்பட்ட விலங்குகளை காட்சிப்படுத்தும் பட்டியலில் சேர்க்கப்பட்ட காளை மாடுகளை நீக்க வேண்டும் என்பது தமிழக அதிகாரிகளின் கோரிக்கை. இதை அகற்றி விட்டால் ஜல்லிகட்டு நடத்துவதற்கான தடைகள் நீக்கப்பட்டு விடும் என்பது அவர்கள் எண்ணம்.

இது அப்போது மத்தியில் ஆட்சி செய்த அரசில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. இதை கடைசி நேரத்தில் செய்ய எங்கள் மட்டத்தில் முடியாது. எனவே, அதற்காக மத்திய அமைச்சர்கள் ரீதியில் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அதிகாரிகளிடம் அறிவுறுத்தி அனுப்பி விட்டோம்.’ எனத் தெரிவித்தனர்.

கடந்த மே 7 ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜல்லிகட்டு மீது தடை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இதை நீக்கி வழக்கம்போல் ஜல்லிகட்டை நடத்த வேண்டும் என மாநிலம் முழுவதும் கோரிக்கை எழுந்தது. இதை ஏற்ற தமிழக அரசு நேற்று முன் தினம் ஒரு அறிவிப்பு அளித்தது அதற்காக தடையை நீக்க தமிழக அரசு எடுத்த முதல் முயற்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் ஜல்லிகட்டு மீதான தடை நீடிக்கும் நிலை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x