Published : 22 Jan 2015 09:18 AM
Last Updated : 22 Jan 2015 09:18 AM

நிறைவடைந்தது புத்தகத் திருவிழா

11,00,000+ வாசகர்கள் | 30,00,000+ புத்தகங்கள் | ரூ.15,00,00,000+ விற்பனை

‘இந்தத் திருவிழா இன்னும் தொடரக் கூடாதா?’ என்ற ஏக்கத்தையும் மீண்டும் நடக்கும் நாளுக்கான எதிர்பார்ப்பையும் வாசகர்களிடம் ஏற்படுத்திய புத்தகக் காட்சி புதன் கிழமையுடன் நிறை வடைந்தது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானத்தில் ஜனவரி 9-ல் தொடங்கி 13 நாட்கள் நடந்த 38-வது புத்தகக் காட்சி பதிப்பாளர்கள், வாசகர்கள், வணிகர்கள் என்று பலதரப்பினருக்கும் பலன் தருவதாய் அமைந்திருந்தது.

சுமார் இரண்டு லட்சம் சதுர அடிப் பரப்பளவில் 700 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான புத்தகக் காட்சியில் 350-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களுடன் ஊடகங்களும் பங்கேற்றனர். ஏறத்தாழ 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5 கோடிக் கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ‘வை - ஃபை’, கூடுதல் ஏ.டி.எம்-கள், புத்தகக் காட்சியில் நடந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு உடனுக்குடன் தகவல்கள், படங்களை அனுப்புவதற்கென்றே பிரத்யேகமாக ஊடக மையம் என்று புதுமைகளும் இடம்பெற்ற இந்தப் புத்தகத் திருவிழாவில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்திருந்தனர். உத்தேசமாக ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 லட்சம் புத்தகங்கள் விற்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது பதிப்புலக வட்டாரம்.

“வாகன நிறுத்தத்துக்குப் போதுமான இடம் என்று பல்வேறு விஷயங்களையும் செய்திருந்தோம். இந்த முறை குழந்தைகள் அதிக அளவில் வந் திருந்தனர். முன்பெல்லாம் 30 வயதுக்கு மேல் இருப்பவர்கள்தான் அதிகம் வருவார்கள். இந்த முறை 20-30 வயது இளைஞர்கள் திரளாக வந்திருந்தனர். இணையத்தில்தான் அதிகம் வாசிக்கிறார்கள், இ-புக்ஸ்தான் அதிகம் விற்கிறது என்றெல்லாம் பேசுவார்கள். உண்மையில், புத்தக விற்பனை முன்பைவிட அதிகரித் திருக்கிறது என்பதற்கு இந்தப் புத்தகக் காட்சிக்கு வந்திருந்த கூட்டமே சாட்சி. கடைசி இரண்டு நாட்களில், விடுமுறை நாட்களைவிடக் கூட்டம் குறைவு என்றாலும், விற்பனை நன்றாக இருந்தது.

நாவல், சிறுகதை போன்ற புனைவிலக்கியப் புத்தகங்கள் விற்பனை மீண்டும் அதிகரித்திருக்கிறது. அதேபோல், வரலாறு, அரசியல் தொடர்பான புத்தகங்கள் அதிகம் விற்றன. குழந்தைகளுக்கான புத்தகங்கள், சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்களுக்கும் மவுசு குறையவில்லை” என்று தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் புகழேந்தி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x