Last Updated : 06 Dec, 2014 08:10 PM

 

Published : 06 Dec 2014 08:10 PM
Last Updated : 06 Dec 2014 08:10 PM

உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கவே











ஜம்மு - காஷ்மீர் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் கூறியுள்ளார்.



உரியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே போன்று தெற்கு காஷ்மீரில் உள்ள டிரால் நகரிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.



இதையடுத்து ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஸ்ரீநகருக்கு நேற்று வந்தார். அப்போது, பதாமிபாக் கன்டோன்மென்ட்டில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



பின்னர், செய்தியாளர்களிடம் தல்பீர் சிங் சுஹாக் கூறும்போது, “ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள மூன்றாம் கட்டத் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்துடன், காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜனநாயக நடவடிக்கையை சீர்குலைக்க முயற்சிக்கும் தீவிரவாதிகளின் நோக்கத்தை முறியடிப்போம் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.



நாட்டை காக்கும் பணியில் கடமை தவறாது செயலாற்றிய ராணுவ வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் வீண் போகாது. தீவிரவாதத்துக்கு எதிராக போரிட நமக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தங்களின் உயிரை அவர்கள் தியாகம் செய்துள்ளனர்.



ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் முதல் 2 கட்ட வாக்குப்பதிவுகள் அமைதியான முறையில் நடைபெற்றதற்கு பாதுகாப்பு படைகள் தீவிரமாக இயங்கியதே காரணம்.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x