Last Updated : 07 Mar, 2015 09:43 AM

 

Published : 07 Mar 2015 09:43 AM
Last Updated : 07 Mar 2015 09:43 AM

சிறப்புப் பயிற்சி மைய மாணவர்களுக்கு நேரடியாக கல்வி உதவித் தொகை வழங்கத் திட்டம்: ஜூலை 1 முதல் 14 மாவட்டங்களில் அமல்

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு தற்போது சிறப்புப் பயிற்சி மையங்களில் படித்து வரும் மாணவர்களுக்கு மத்திய அரசு நேரடியாக கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். இருப்பினும் வறுமை, கூடுதல் பணித்திறன், குறைந்த கூலி உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் குழந்தைத் தொழிலாளர்கள் பணி யமர்த்தப்படுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு சிறப்புப் பள்ளிகளில் சேர்த்து அவர்கள் கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதலோடு தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்புப் பயிற்சி மையங்களில் 2 ஆண்டுகள் பயிற்சி முடித்த மாணவர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து தொடர்ந்து கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 19 சிறப்புப் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், 667 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு உணவு, சீருடைகள், புத்தகம் அனைத்தும் இலவசமாக வழங் கப்படுகின்றன. மேலும், இப் பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தலா ரூ.150 வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அனைத்து மாணவ, மாணவி களுக்கும் எஸ்.பி.ஐ. வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலம் கல்வி உதவித் தொகை மாவட்ட குழந்தைத் தொழிலாளர் திட்டம் மூலம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும், மத்திய அரசின் தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையால் டெல்லியில் இருந்தே மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தும் திட்டம் கடந்த ஆண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது.

இந் நிலையில், இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் தமிழகத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருச்சி மட்டுமின்றி மீதமுள்ள 14 மாவட்டங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x