Published : 19 Mar 2015 09:41 PM
Last Updated : 19 Mar 2015 09:41 PM

‘ஆபரேஷன் அம்லா’ பாதுகாப்பு ஒத்திகை: 63 பேர் பிடிபட்டனர்

தமிழக கடலோர மாவட்டங்களில் நடந்த ‘ஆபரேஷன் அம்லா’ பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரவாதிகள் போல வேடமணிந்து வந்த 63 பேர் பிடிபட்டனர்.

2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் இந்தியா முழுவதும் கடல் வழி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதன் ஒரு அம்சமாக ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்துக்கு ஒரு முறை ‘ஆபரேஷன் அம்லா’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள 13 கடலோர மாவட்டங்களில் உள்ள தமிழக காவல் துறையினர், தமிழக கடலோர காவல்படை, மத்திய கடலோர பாதுகாப்பு படை ஆகிய மூன்று பிரிவினரும் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இந்த ஒத்திகையின்போது மரைன் கமாண்டோ என்றழைக்கப்படும் மத்திய கடலோர படையினர் தீவிரவாதிகள் போல ஆயுதங்களுடன் கடலில் இருந்து நகருக்குள் ஊடுருவி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குள் நுழைவார்கள். அவர்களை தமிழக போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். 18-ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் இன்று மாலை வரை தீவிரவாதிகள் போல வேடமணிந்த 63 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். நாளை காலை 6 மணியுடன் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி முடிகிறது.

கப்பல்களை கடத்தி ஒத்திகை

ஆபரேஷன் அம்லா பரிசோதனையின் முடிவாக சென்னை துறைமுகத்தில் பயணிகள் கப்பலை கடத்திச் சென்று நடுக்கடலில் வைத்து மிரட்டுவதுபோலவும், கடலோர காவல் படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் மற்றொரு கப்பலில் செல்லும் பாதுகாப்பு படையினர், துப்பாக்கி சூடு நடத்தி பயணிகளை மீட்பதுபோலவும் ஒத்திகை பார்த்தனர். இதேபோல சரக்கு கப்பல்களை கடத்த முயன்ற வேடமணிந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி பிடித்தனர். கடலூரில் மட்டும் ஒரு வணிக வளாகத்துக்குள் தீவிரவாதிகள் போல வேடமணிந்தவர்கள் நுழைந்து விட்டனர்.

கடலூரைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் போலீஸாரும், கடலோர காவல் படையினரும் சரியாக செயல்பட்டிருப்பதாக கடலோர காவல் படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x