Published : 14 Feb 2015 08:56 AM
Last Updated : 14 Feb 2015 08:56 AM

அமைதியாக முடிந்தது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 81.79% வாக்குப்பதிவு- நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித் தனர். 81.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2011-ம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டு தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தனி நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதால், தனது முதல்வர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை இழந்தார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.வளர்மதி, திமுக சார்பில் என்.ஆனந்த், பாஜக சார்பில் எம்.சுப்ரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.அண்ணாதுரை மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,70,281. இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 322 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டன.

நீண்ட வரிசை

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கப்பட்டு, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாநகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளிலும் ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி 16.73 சதவீத வாக்குகளும், முற்பகல் 11 மணி நிலவரப்படி 34.37 சதவீத வாக்குகளும், பகல் 1 மணிக்கு 53.95 சதவீதமும், பிற்பகல் 3 மணி வரையில் 65.89 சதவீதமும், மாலை 5 மணிக்கு 76.89 சதவீதமும் பதிவாகின. மாலை 6 மணி வரை மொத்தம் 81.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

ஆண் வாக்காளர்கள் 1,07,976 பேர், பெண் வாக்காளர்கள் 1,13,077 பேர், இதர வாக்காளர்கள் 7 பேர் என 2,21,060 பேர் வாக்களித்துள்ளனர்.

அரை மணி நேரம் தாமதம்

அதவத்தூர், ஓலையூர் உள்ளிட்ட ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்படாததால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. முத்தரச நல்லூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்ந்து பல முறை பழுதானதால் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இயந்திரம் சரிசெய்யப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

தொகுதியில் உள்ள 322 வாக்குச் சாவடிகளில் 79 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டிருந்தது. இங்கு கூடுதல் போலீஸார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சில இடங்களில் வாக்குவாதம்

ஒருசில இடங்களில் திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மற்றபடி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டி.ஜி.வினய் ஆகியோர் வாக்குப்பதிவு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வெளியூர்களில் பணியாற்றும் ஸ்ரீரங்கம் வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் 82.04 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x