Published : 06 Feb 2015 01:05 PM
Last Updated : 06 Feb 2015 01:05 PM

வேலை கொடுக்கும் திருச்சி கல்லூரி இளைஞர்கள்

பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி கல்லூரிக்கு வருவது, வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு மரத்தடியில் அரட்டை அடிப்பது ஆகியவை 1980-களிலும், 90-களின் தொடக்கத்திலும் மாணவர்களின் அடையாளம். இப்போது அப்படியான கூட்டத்தை பெரிதாகப் பார்க்க முடிவதில்லை.

இன்றைக்குப் படிக்க வரும் எல்லா மாணவர்களும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவுடன்தான் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கின்றனர். அதில் சிலர் படிக்கும்போதே தங்கள் சாதனைக் கணக்கைத் தொடங்கிவிடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள்தான் திருச்சி தேசியக் கல்லூரியில் பி.பி.ஏ., இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விக்னேஷ்ராம், சசிக்குமார், முரளிதரன், ஜார்ஜ் புஷ்பராஜ் ஆகியோர். இந்த நான்கு பேரும் கல்லூரியில் நீண்டகால நண்பர்கள். கல்லூரிக்கு வந்தோமா, போனோமா என்றில்லாமல் ஏதாவது செய்தால் என்ன என்று சிந்தித்தவர்கள். அந்தச் சிந்தனைக்கு உடனடியாகச் செயல்வடிவம் கொடுத்து உயிரூட்டியவர்கள்.

வேலை கிடைச்சாச்சு!

நால்வரும் சேர்ந்து ‘தமிழ்நாடு கரியர் சர்வீஸ்’ என்ற பெயரில் வேலைக்கான கன்சல்டன்சி அலுவலகத்தைத் திருச்சியில் தொடங்கினர். அதன் மூலம் கல்லூரிகளில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்குப் பகுதி நேர, முழுநேர வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகின்றனர்.

பெரும்பாலும் செல்போன் நிறுவனங்களில் தமிழ் பிபிஓ பணிதான் இவர்களுடைய சாய்ஸ். இந்த வேலையைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் காட்டுவதுடன், அதற்குத் தேவையான பயிற்சியையும் அளிக்கின்றனர். இதற்காக இவர்கள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. இவர்களுடைய ஆற்றுப்படுத்துதலிலும், பயிற்சியுடன் கூடிய கனிவான வழிகாட்டுதலிலும் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 250-க்கும் மேற்பட்டோர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர்.

வேலை வாய்ப்பு இதழ்

இப்படிப் போகிறபோக்கில் வேர்களுக்கு நீரைத் தூவும் மழைத்துளிகளாய்த் தொடர்ந்து செயல்பட்டுவரும் பிரதிபலன் பாராத இந்த இளைஞர்களின் அடுத்த கட்ட முயற்சி உள்ளூருக்கு மட்டுமேயான மாத இதழை வெளியிடுவது. கடந்த ஜனவரி முதல் தேதியன்று இவர்கள் ‘ஞாபகங்கள்’ என்ற மாத இதழை வெளியிட்டுள்ளனர்.

திருச்சி மாநகரில் மட்டும் கிடைக்கும் இந்த இதழில் உள்ளூர் மக்களுக்குத் தேவைப்படும் தகவல்கள், வேலைவாய்ப்பு, பழமையைச் சொல்லும் கட்டுரைகள், உள்ளூர் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. விடுமுறை தவிர்த்துக் கல்லூரி நாட்களில் மாலை 3 மணிக்கு மேல் இவர்களின் இதழ் பணி தொடங்குகிறது.

கூட்டுப் பணி

நால்வரும் தங்களுக்குள் வேலையைப் பிரித்துக் கொள்கின்றனர். 2 பேர் கடைகளில் விளம்பரம் சேகரிக்க, ஒருவர் தகவல் சேகரிப்பு, கட்டுரைகள் தயார் செய்வதில் ஆர்வம் காட்ட, நான்காம் நபர் இதழுக்கான படங்கள் மற்றும் வடிவமைப்பில் ஈடுபடுகிறார். இவ்வாறாக மாதத்தில் 15 நாட்கள் பரபரப்பாக இயங்குகின்றனர். சேகரித்தவற்றைக் கொண்டு மாதத்தின் கடைசியில் பக்க வடிவமைப்பு, அச்சிடுதல் நடக்கிறது.

4 பக்கங்களுடன் முதல் முறையாக ஜனவரியில் இவர்கள் வெளியிட்டது பத்தாயிரம் பிரதிகள். விளம்பரம் பெற்ற பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அதிகாலையில் இவர்களே விநியோகிக்கின்றனர். முதல் முயற்சியிலேயே ரூ.13 ஆயிரம் வரை விளம்பரம் பெற்றுள்ளனர். தற்போது வரவுக்கும் செலவுக்குச் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதாகவும், இன்னும் மாணவர்கள் கைகோக்கும் பட்சத்தில் அடுத்தடுத்து வரும் மாதங்களில் 40 ஆயிரம் பிரதிகள் வெளியிடுவது என்பதை இலக்காக நிர்ணயம் செய்திருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

தேசியக் கல்லூரியின் முதல்வர் அன்பரசும் தங்களின் துறைத் தலைவர் சேகரும் மாத இதழ் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பதுடன் ஆலோசனைகளும் வழங்குகிறார்கள் என்று உற்சாகமாகக் கூறுகின்றனர்.

படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x