Last Updated : 18 Feb, 2015 05:40 PM

 

Published : 18 Feb 2015 05:40 PM
Last Updated : 18 Feb 2015 05:40 PM

மோடி பெயர் பொறித்த உடையின் ஏல நிலவரம் ரூ.1.11 கோடி

பிரதமர் மோடி அணிந்த 'பந்த்காலா' உடைக்கு சூரத் ஏலத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரை ரூ.1.11 கோடிக்கு விலை கேட்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தந்திருந்த குடியரசு தினவிழாவின் போது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த 'பந்த்காலா' உடை சூரத்தில் இன்று ஏலத்தில் விடப்பட்டது.

பிரதமர் மோடியின் அந்த உடையில், தங்க நிறத்தில் 'நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' என்று வரிசையாக நெய்யப்பட்டிருந்தது.

சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புடைய இந்த உடையை அமெரிக்க அதிபர் ஒபாமாவை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசும்போது பிரதமர் மோடி அணிந்திருந்தார். அவரது இந்த உடை அரசியல் தரப்பில் மிகுந்த விமர்சனங்களுக்குள்ளானது.

இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் இந்த ஏலம் நடக்க உள்ள நிலையில் இன்றே 'பந்த்காலா' உடையை வாங்க என்.ஆர்.ஐக்கள் பலர் ஆர்வம் காட்டினர்.

இந்த உடையின் மூலம் ஏலத்தில் கிடைக்க பெறும் தொகை கங்கையை சுத்திகரிக்கும் திட்டத்துக்கு பயன்ப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பிரதமர் மோடி பயன்படுத்திய பொருட்கள் பலவும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உடை ஏலம் விடப்பட்ட தொடக்கத்தில் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜூபார் அகர்வால் ரூ. 51 லட்சத்துக்கு ஏலம் கேட்டார்.

தொடர்ந்து சுரேஷ் அகர்வால் என்ற தொழிலதிபர் ரூ. 1 கோடிக்கு ஏலம் கேட்டார். அவரைத் தொடர்ந்து என்.ஆர்.ஐ ஒருவர் அந்த உடையை ரூ. 1.11 கோடிக்கு ஏலம் கேட்டார். தொடர்ந்து உடையை ஏலம் எடுக்க போட்டி நிலவி வருவதால் எதிர்ப்பார்த்ததை விட அதிகமான தொகைக்கு இந்த உடை விலை போகும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x