Last Updated : 11 Feb, 2015 12:21 PM

 

Published : 11 Feb 2015 12:21 PM
Last Updated : 11 Feb 2015 12:21 PM

மீன் காய்க்கும் மரம்

இந்து பயந்து போனாள். வழியில் ஒரு பிள்ளையைக்கூட காணலியே. ரெம்ப நேரம் ஆயிருச்சோ?. பள்ளிக்கூடத்தில் மணி அடிச்சிருப்பாங்களோ? புதிதாக வந்திருக்கிற வாத்தியார் சும்மா விடமாட்டாரே!

நேற்றே தாமதமாய் வருபவர்களுக்கு என்ன தண்டனை என்று சொல்லியிருந்தார். “ புத்தகங்களைத் தலையில் வைத்துக் கொண்டு ரெம்ப நேரம் நிக்கணும்..”

அதை நினைத்தபோது இந்துவுக்கு வெட்கமாயிருந்தது. இன்று அப்படி நிற்க வேண்டியது வருமோ? வேகமாக நடந்தால் மட்டும் போதாது. ஓடணும். இந்து ஓடத் தொடங்கினாள். ஓட்டத்தில் என்ன வேகம்?

ஓடுகிற வண்டியில் போகும்போது பின்னால் பாய்ந்து போகிற மரங்களைப் பற்றி யோசித்தாள். அதை மாதிரி இப்போது சாலையின் அருகில் உள்ள மரங்கள் எல்லாம் பின்னால் பாய்ந்து சென்றன. திடீரென ஒரு மரத்திலிருந்து ஏதோ ஒரு கிளியின் சத்தம்.

“ இந்துக்குட்டி…நிலாக்குட்டி…”

இந்துவுக்கு ஆச்சரியம். அந்தக் கிளியின் குரல் அம்மாவின் குரலைப் போலவே இருந்ததே! இதென்ன ஒரு மாயாஜாலம்! பறவைகளால் பேச முடியுமா?

தார்ச்சாலையில் யாரையும் பார்க்க முடியவில்லை. ஒரு ஜீவராசியையும் பார்க்க முடியவில்லை. என்ன ஆச்சு இன்று? இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிற நேரமா இது? சீக்கிரமாகப் பள்ளிக்கூடம் போய்ச் சேரணும்.

ஓட்டத்தின் வேகம் கூடியது. காற்றில் பறக்கிற தாத்தாப்பூச்சியைப் போல அப்படியே பறந்து போனாள். இந்து திடுக்கிட்டுப் போனாள். திடீரெனக் கருத்த தார்ச்சாலை மறைந்து மணல் மட்டுமே விரிந்து கிடந்தது

இந்து திகைத்து சுற்றிலும் பார்த்தாள். சுற்றிலும் மணல். இன்னொரு சமயமாய் இருந்தால் இந்நேரம் மணலில் உருண்டு விளையாடியிருப்பாள். இப்போது விளையாட்டைப் பற்றி நினைக்கக் கூட முடியவில்லை. உள்ளுக்குள் துக்கம் அதிகரித்தது.

யாரையாவது பார்த்தால் நல்லது என்று நினைத்தாள் இந்து!

கொஞ்ச தூரத்தில் ஒரு மரம் தெரிந்தது. அதற்குப் பின்னால் இன்னும் தூரத்தில் இலைகளில்லாத இன்னொரு மரமும் தெரிந்தது. கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள். பள்ளிக்கூடத்துக்கு எந்த வழியில் போக முடியும்? வழியை யாரிடம் கேட்பது? மரம் வழி சொல்லாதே.

ஆனாலும், இந்து மரத்தை நோக்கி நடந்தாள். மணலில் கால் புதைந்தது. சூடு தாங்க முடியவில்லை. ஓடிப்போய் மரத்தடியில் நின்றாள். அப்பாடா… நிழல் கொஞ்சம் மகிழ்ச்சி கொடுத்தது. நிழலில் நின்று கொண்டு தூரமாய்ப் பார்த்தாள். அங்கே ஆகாயம் பூமியைத் தொடுகிற இடத்தில் உயரமாய் தெரிவது என்னவாக இருக்கும்?

மணலிலிருந்து தீப்பொறிகள் போல புழுதி மேலே பறந்தது. சூரியன் ஒளிப்பிழம்பாய் ஜொலித்தது. அந்தப் பொருளை உற்றுப் பார்த்தாள் இந்து. அதிசயம்! அது பள்ளிக்கூடமல்லவா? மின்னுகிற மணலில் ஒத்தையாய் ஒரு கட்டிடம். இப்படியில்லையே பள்ளிக்கூடம்? பள்ளிக்கூடத்துக்குப் போகிற வழியா இது இல்லையே?

இந்து மிகவும் பயந்து அழுதாள். அப்போது மேலே விசித்திரமான சிரிப்பொலிகள் கேட்டன. இந்து மரத்தைப் பார்த்தாள். அதில் இலைகளை காணோம். எல்லாமே மீன்கள்!

மரக்கிளைகளில் ஆயிரமாயிரம் மீன்கள் தொங்கிக் கொண்டிருந்தன! அட, மீன் காய்க்கிற மரமோ இது? இந்து திகைத்து அதைப் பார்த்தாள். அப்போது மீன்கள் கூட்டமாய்ச் சிரித்தன. ஒரு மீன் பேசத் தொடங்கியது.

“ உனக்கு அதிசயமா இருக்கும். எங்களைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் இப்படித் தொங்குகிறோம். உன்னுடைய பள்ளிக்குப் பின்னால் ஒரு ஆறு ஓடுதுல்ல. அந்த ஆத்து மீன்கள் தான் நாங்க. ஆத்தில வெள்ளம் கரைபுரண்டு ஓடுது. யாருக்கும் பாதுகாப்பில்ல. அந்தா பாரு தூரத்தில உன்னோட பள்ளிக்கூடம். அதுகூட இடியுற மாதிரி இருக்கு”.

இடி முழங்குவதைப் போல ஒரு சத்தம் கேட்டது. பள்ளிக்கூடக்கட்டிடம் இடிந்து விழுவதை இந்து பார்த்தாள். உடனே அவள் ஓடத்தொடங்கினாள். எப்படியாவது வீட்டுக்குப் போய்ச் சேர வேண்டும்.

கொஞ்ச தூரம் போயிருப்பாள். அப்போது அவள் வந்த பாதையில் மணல் மூடியிருப்பதைப் பார்த்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தாள். வானத்திலிருந்து ஒரு சத்தம். ஆயிரம் ரயில்கள் ஒன்று போல ஓடி வருவதைப் போல பெரிய சப்தம்.

கண்களை அகல விரித்துப் பார்த்தாள். கண்ணுக்கெட்டாத உயரத்தில் கடலலைகள் பொங்கி வந்தன! கடல் எல்லாவற்றையும் விழுங்குகிறதோ? இனி எங்கே ஓடுவது? கடலலை அருகில் வந்து விட்டது!

இந்து தன்னால் முடிகிற உச்சத்தில் கூப்பாடு போட்டாள். சத்தம் வெளியே வரவில்லை.

“இந்துக்குட்டி…கண்ணு இந்துக்குட்டி..”

கண்களைத் திறந்தபோது அப்பாவின் முகம் தெரிந்தது. கடலலைகள் மறைந்த இடத்தில் அப்பாவின் சிரித்த முகம். இந்து வியர்த்தது. இந்துவுக்கு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் அவள் சிரிக்க முயன்றாள். உதடுகள் காய்ந்து வறண்டிருந்தன.

இப்படியும் ஒரு கனவு வருமோ? அவள் கண்ட பயங்கரக்கனவை அப்பாவிடம் விவரமாகச் சொன்னாள். அப்பா சிரித்தார்.

“குழந்தைகள் விசேஷமாகக் கனவு காண்பார்கள் என்று சொல்லுவார்கள். பெரியவர்களைவிடக் கற்பனைத்திறன் உன்னைப் போன்ற குழந்தைகளுக்கு அதிகமல்லவா? “

“கனவில பாம்பு வந்தா ஏதோ தோஷம்னு பாட்டி சொல்லுவாங்களே. நான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க அப்பா!’’

“அதெல்லாம் சும்மா சொல்றது இந்து. மூட நம்பிக்கை. அது பாட்டியோட தப்பில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பாட்டிக்குத் தெரியாதில்லையா?”

“ சரி இந்து, அதையே நினைக்காதே. போய் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வா” என்றார் அப்பா.

“ இந்து குட்டி ஏன் கூப்பாடு போட்டா?” என்று கேட்டாள் அம்மா.

“ மத்தியானத்துக்கு மீன் குழம்பு வைக்கலன்னு கோவிச்சிகிட்டு படுத்தா.. அது தெரியுமா உங்களுக்கு…?

இந்து தலை குனிந்தாள். ஏதோ ரகசியத்தைக் கண்டுபிடித்தவர் போல அப்பா,

“இந்துவோட கனவுக்கு இதுதான் காரணம் போல …” என்று சொல்லிவிட்டு அப்பா வாய்விட்டுச் சிரித்தார். பிறகு அவளுடைய தலையைத் தடவிக்கொடுத்துக் கொண்டே சொன்னார்.

“ இந்து.. அறிந்தும் அறியாமலும் எவ்வளவோ விஷயங்கள் நம்முடைய மனசுக்குள் வந்து சேர்ந்துகிட்டே இருக்கும். நாம் தூங்கபோறப்ப தூங்காமலிருக்கும் ஒரு பகுதிமனம் இருக்கு. அது செய்கிற வேலை தான் கனவு. நீ பெரியவளாகும்போது இன்னும் விவரமாய் தெரிஞ்சுக்குவ.”

அப்பா இன்னும் தொடர்ந்தார்.

“ இன்னிக்கு மீன்குழம்பு கிடைக்கலங்கிற வருத்தம் உன் மனசில வந்திச்சில்ல அப்படிப் பல விஷயங்களும் தான். அப்புறம் நேற்று தாமதமாக வகுப்புக்குப் போனபோது வாத்தியார் சொன்ன தண்டனை. இதெல்லாம் சேர்ந்து உருவானதுதான் அந்தக் கனவு.

காடுகள் அழிந்தால் மழை பெய்யாமல் எல்லா இடமும் சுடுகாடாகும்ன்னு நான் சொன்னேனில்லையா. ஒரு வேளை உன்னோட கனவில வந்த சீனி மணலுக்கு அதுதான் காரணமாயிருக்கும்”

இந்துவுக்கு அப்போதுதான் கொஞ்சம் புரிந்தது.

“இந்து இனிமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுற மாதிரி கனவு காண்பே இல்லையா?” என்று அவரது அம்மா சொன்னாள்.

இந்து வெட்கப்பட்டுக்கொண்டு சிரித்தாள்.

மலையாளத்தில்- வைசாகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x