Published : 05 Feb 2015 04:16 PM
Last Updated : 05 Feb 2015 04:16 PM

ஜெயலலிதா வழக்கில் 3-ம் தரப்பாக சேர்க்கக் கோரிய க.அன்பழகன் மனு தள்ளுபடி; சுப்பிரமணியன் சுவாமிக்கு சிறப்பு அனுமதி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் தம்மை 3-ம் தரப்பாக‌ சேர்க்கக் கோரிய‌ திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரது மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அதேநேரத்தில், சுப்பிரமணியன் சுவாமியின் '3-வது தரப்பாக ஆஜராகி வாதாடும்' கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், அரசு தரப்பு வழக்கறிஞருடன் இணைந்து நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக அறிக்கை அளிக்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, இந்த இரு உத்தரவுகளையும் இன்று பிறப்பித்தார்.

முன்னதாக, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் தம்மை 3-ம் தரப்பாக‌ சேர்க்கக் கோரிய‌ திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது விவாதம் நடைபெற்று வந்தது.

அன்பழகன் தரப்பு இறுதி வாதத்தை முன்வைத்த திமுக வழக்கறிஞர் சரவணன் "அன்பழகனின் கோரிக்கையை ஏற்று சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 2013-ல் அரசு வழக்கறிஞரின் செயல்பாடுகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்ததால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எங்களை இவ்வழக்கில் 3-ம் தரப்பாக சேர்த்துக்கொண்டது.

சுப்பிரமணியன் சுவாமியின்இறுதி வாதம்:

'எனது புகாரின் அடிப்படையிலேயே ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தர விட்டது. மேலும் இவ்வழக்கில் நான் அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளேன். ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியபோது அரசு வழக்கறிஞர் ஆஜராக வில்லை. நான் ஆஜராகி அவருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தேன்.

அவருக்கு ஜாமீன் வழங்கிய போதும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தியபோதும் உச்சநீதிமன்றம் எனது கருத்தை கேட்டது. எனவே இவ்வழக்கின் முதல் புகார்தாரர் என்ற அடிப்படையிலும்,குற்றவியல் நடைமுறை சட்டம், பிரிவு 301(2)-ன் கீழும் என்னை இவ்வழக்கில் 3-ம் தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வழக்கின் இறுதிக்கட்டத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடவும், எழுத்துப்பூர்மான இறுதிவாதத்தை தாக்கல் செய்யவும், அரசு வழக்கறிஞருக்கு ஆலோசனை வழங்கவும் அனுமதிக்க வேண்டும்' என்று இறுதி வாதத்தில் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

இதனால் விசாரணையின் போது அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், எழுத்துப்பூர்வமாக இறுதி வாதத்தையும் தாக்கல் செய்தோம்.

குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 301(2)-ன் கீழ் நீதியை நிலைநாட்ட குற்றவியல் வழக்குகளில் தனிநபர் தலையிட உரிமை உள்ளது. எனவே எங்களை இவ்வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவ அனுமதிக்க வேண்டும்" என்றார். இதற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும், ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமாரும் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

அப்போது வாதிட்ட பி.குமார், குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 301(2)-ன் கீழ் தனிநபருக்கு வழங்கும் உரிமை அன்பழகனுக்கு பொருந்தாது. ஏனென்றால் அவர் திமுகவின் பொதுச்செயலாளர். மேலும் அவர் ஒருபுறம் அரசு வழக்கறிஞருக்கு உதவ அனுமதிக்க வேண்டும் எனக் கோருகிறார். மறுபுறம் அவரை நீக்க வேண்டும் என்கிறார். இதிலிருந்து அவர்களது கோரிக்கையில் உள்நோக்கம் வெளிப்படுகிறது என்றார் அவர்.

இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அன்பழகன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x