Published : 09 Feb 2015 09:32 AM
Last Updated : 09 Feb 2015 09:32 AM
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ரோட்டரி சங்கம் சார்பில் சென்னையில் நேற்று 3 வகையான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
ரோட்டரி சங்கத்தின் 3230- மாவட்டம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று 3 ஊர்வலங்கள் நடைபெற்றன. ரோட்டரி சங்கத்தின் பன்னாட்டு போலியோ கமிட்டி தலைவர் ஜான் எஃப்.ஜெர்ம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு 3 வகையான ஊர்வலங்கள் ஒரே நேரத்தில் சென்னையில் நடத்தப்பட்டுள்ளன. எரிசக்தியை சேமித்து, இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் நடை ஊர்வலம் நடைபெற்றது. மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. சுற்றுப்புறத்தை பசுமையாக வைத்திருப்பதன் மூலம் நாட்டை பசுமையாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க முடியும் என்ற முழக்கத்துடன் சாலைகளில் அபூர்வமாக செல்லக் கூடிய சைக்கிள் ரிக் ஷா ஊர்வலம் நடைபெற்றது. இதில் 4 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் போலியோ ஒழிப்பில் ரோட்டரி சங்கத்துக்கு முக்கிய பங்கு உள்ளது.
அதேபோல தற்போது இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு அம்சமாக பசுமை இந்தியா, தூய்மை இந்தியா என்ற முழக்கத்தை கையில் எடுத்திருக்கிறோம். இந்த திட்டத்தை இன்று கல்லூரி மாணவர்கள் மனதில் விதைத்திருக்கிறோம். விரைவில் பலன் கிடைக்கும் என்றார் அவர்.
இந்த ஊர்வலத்தில் ரோட்டரி மாவட்ட கவர்னர் ஐ.எஸ்.ஏ.கே.நாசர், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT