Published : 28 Feb 2015 08:49 AM
Last Updated : 28 Feb 2015 08:49 AM
மும்பை பங்குச் சந்தை கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு எழுச்சி பெற்றது. பட்ஜெட்டுக்கு முன்தினமான வெள்ளிக் கிழமை மொத்தம் 473 புள்ளிகள் உயர்ந்து 29 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது.
கடந்த ஆண்டு பொறுப்பேற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ள முழுமையான பட்ஜெட் என்பதால் அதிகபட்ச எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நேற்று பொருளாதார ஆய்வறிக்கை வெளியான பிறகு பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக பெரிய அளவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியதும் எழுச்சிக்கு முக்கியக் காரணமாகும். மேலும் நாட்டின் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையில் 161 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 8800 புள்ளிகளைக் கடந்தது.
நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றமளித்தாலும், பொது பட்ஜெட்டில் மாற்றங்கள் இருக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் 2015-16-ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் 8 சதவீதம் முதல் 10 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் படிப்படியாக நிதிப் பற்றாக்குறை குறைக்கப்படும் என்ற உத்தரவாதமும் பங்குச் சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தையில் இந்த அளவுக்கு புள்ளிகள் உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
``அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக பொருளாதார ஆய்வறிக்கை அமைந்துள்ளது. மேலும் இந்தியாவில் நிலவும் பேரியல் பொருளாதார நிலை மற்றும் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள சீர்திருத்தங்கள் அனைத்துமே முதலீட்டுக்கு ஏற்ற இடம் இந்தியாதான் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இத்தகைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக பட்ஜெட் இருக்கும்,’’ என்று எதிர்பார்ப்பதாக ஆனந்த் ரதி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் தேவங் மேதா தெரிவித்தார்.
பங்குச் சந்தையில் டாடா பவர், லார்சன் அண்ட் டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டால்கோ, கோல் இந்தியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, என்டிபிசி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன.
சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும் பங்குச் சந்தைகள் சிறப்பு நிகழ்வாக செயல்படுகின்றன. பட்ஜெட் தாக்கலின்போது சந்தையில் ஏதேனும் தில்லு முல்லு நிகழாதபடி கண்காணிக்க செபி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அத்துடன் பங்கு வர்த்தகம் சீராக நடைபெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக பட்ஜெட் சமயத்தில் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT