Published : 01 Feb 2015 11:18 AM
Last Updated : 01 Feb 2015 11:18 AM

பாமக தலைமையில் புதிய அணி: ஜி.கே.மணி உறுதி

வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் புதிய மாற்று அணி அமைக்கப்படும். அந்த அணி பெரிய வெற்றியை பெறும்” என்று பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.

சேலத்தில் பிப்ரவரி 15-ம் தேதி பாமக அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாமக உருவாகியுள்ளது. குடிப்பழக்கத்தால் தமிழகம் சீரழிந்துள்ளது. நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் சிறு, குறுந்தொழில்கள் அழிந்துவிட்டன. தொழில்வளர்ச்சி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது.

இவற்றை சீர் செய்ய 2016 தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கான மாநாடாக சேலம் மாநாடு நடக்கவுள்ளது. பாமக தலைமையில் புதிய மாற்று அணி அமைக்கப்படும். அந்த அணி பெரிய வெற்றியை பெறும்.

‘மாதொருபாகன்’ நூல் ஆசிரியர் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திருச்செங்கோடு பெண்களை இழிவாக எழுதியதை பாமக வன்மையாகக் கண்டிக்கிறது. மேட்டூர் அணையின் உபரி நீரை சேலம் மற்றும் நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருமணிமுத்தாறு, சரபங்கா ஆற்றில் திருப்பி விடுவதற்கு பதிலாக வேறு பகுதிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திட்டம் உருவாக்கப்படுகிறது.

இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்திட்டத்தை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் ஜி.கே.மணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x