Published : 08 Feb 2015 09:35 AM
Last Updated : 08 Feb 2015 09:35 AM

தேர்தல் பிரச்சாரத்தில் அலட்சியம் வேண்டாம்: கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.வளர்மதியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வதற்காக தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் தொகுதியின் அனைத்து பகுதியிலும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். நேற்று காலை 10.45-க்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், எம்பி தம்பிதுரை ஆகியோர் பேசினர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தது:

கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு செய்த சாதனைகளை வீடு வீடாக சென்று எடுத்துக்கூற வேண்டும். ஒவ்வொரு வாக்காளரையும் தொண்டர்கள் தனித்தனியாக சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள முடிவு செயற்கையானது. இதிலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவார்.

தேர்தல் தினத்தன்று மிக கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி வாக்கு சதவீதத்தை கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும். வாக்குச்சாவடிக்கு ஒவ்வொரு வாக்காளரையும் கொண்டு வந்து சேர்ப்பதில் கவனமாக செயல்படவேண்டும்.

ஸ்ரீரங்கம் அதிமுகவுக்கு சாதகமான தொகுதிதான் என அசட்டையாக இருந்துவிடவேண்டாம். மகத்தான வெற்றி பெறவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு நேற்று மதியம் விமானம் மூலம் திருச்சியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x