Published : 26 Feb 2015 10:12 AM
Last Updated : 26 Feb 2015 10:12 AM
கேரள அரசு தேக்கடியில் கார் பார்க்கிங் அமைக்குமிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்கான செலவில் தனது பங்கு தொகையை தமிழக அரசு ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் சுற்றுலா வளர்ச்சிக்காக பெரிய கார் பார்க்கிங் அமைக்கும் பணியை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் நடைபெறும் இடம் புலிகள் பாதுகாப்பு வனப் பகுதியில் அமைந்திருப்பதாகவும், அப்பணிக்கு தடை விதிக்கக் கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் தொடரப்பட்ட வழக்கில், கார் பார்க்கிங் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு தன்னை பிரதிவாதியாக சேர்த்துக்கொண்டு, கேரள அரசு கார் பார்க்கிங் கட்டிவரும் இடம் தமிழக அரசுக்கு சொந்தமான, முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி என வாதிட்டது.
இது தொடர்பாக அப்பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ரூ.14 லட்சத்து 60 ஆயிரம் செலவாகும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதை இரு மாநில அரசுகளும் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் பகிர்ந்து செலுத்த வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. கேரள அரசு தனது பங்குத் தொகை ரூ.7 லட்சத்து 30 ஆயிரத்தை ஏற்கெனவே செலுத்திவிட்டது.
தமிழக அரசு செலுத்தாத நிலையில் இவ்வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உறுப்பினர்கள், தமிழக அரசு தனது பங்கு தொகையை செலுத்த ஒரு வாரம் அவகாசம் வழங்கி, வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT