Published : 20 Jan 2015 11:11 AM
Last Updated : 20 Jan 2015 11:11 AM

ஒரே மேடையில் பொது விவாதம்: கேஜ்ரிவால் சவாலுக்கு கிரண் பேடி பதிலடி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஒரே மேடையில் பொது விவாதத்தில் தன்னை எதிர்கொள்ள பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி தயாராக இருக்கிறாரா என கேஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கிரண் பேடி, "கேஜ்ரிவாலுடன் பொது விவாதத்துக்கு தயாராக இருக்கிறேன். பாஜக மேலிடம் விரும்பினால் அது நடைபெறும். ஆனால், அந்த விவாதம் சட்டசபையில் நடக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

கேஜ்ரிவாலைப் பற்றி நான் நன்கு அறிவேன். அவர், பேசிக் கொண்டேதான் இருக்கிறார். அவர் என்ன மாதிரியான விவாதத்தில் ஈடுபடுவார் என்பதும் எனக்குத் தெரியும்.

இப்போது நான் செயல்பட விரும்புகிறேன். விவாதங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. இப்போது தேர்தலுக்காக செயல்பட்டுவிட்டு விவாதங்களை பின்னர் சட்டசபையில் நடத்தலாம்" என்றார்.

முன்னதாக, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கிரண் பேடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கேஜ்ரிவால், தேர்தலையொட்டி பொது விவாதத்துக்கு தயாரா என சவால் விடுத்துள்ளார்.

நடுநிலையாளர் முன்னிலையில் பொது விவாதத்தை நடத்த வேண்டும் என கேஜ்ரிவால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், ட்விட்டரில் நீண்ட நாட்களாக தான் கிரண் பேடியை பின் தொடர்ந்து வந்ததாகவும், ஆனால் தன்னை கிரண் பேடி பிளாக் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ட்விட்டர் தடையை நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் விமர்சனத்துக்குள்ளானார். அப்போது அவர் தன்னை ஒரு 'அராஜகவாதி' எனக் கூறிக்கொண்டார். இதனையடுத்து கேஜ்ரிவாலை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார் கிரண்பேடி என்பது கவனிக்கத்தக்கது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 7-ல் நடைபெறவுள்ளது. ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக அர்விந்த் கேஜ்ரிவால் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், அவருக்கு எதிராக முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியை களமிறக்கியுள்ளது பாஜக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x