Published : 10 Jan 2015 06:13 PM
Last Updated : 10 Jan 2015 06:13 PM
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அந்நாட்டு அதிபராக பதவியேற்றிருக்கும் மைத்ரிபால சிறிசேனாவை பிரட்டன் பிரதமர் கேமரூன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவை வீழ்த்திய மைதிரிபால சிறிசேனா அந்நாட்டின் புதிய அதிபராக வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரிட்டன் பிரதமர் கேமரூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைக்கு நான் வந்தபோது உங்களது நாட்டில் உள்ள வளத்தையும், மக்களிடம் உள்ள திறமையும் கண்டு வியந்தேன். உங்கள் நாட்டில் இருக்கும் அத்தகைய வளங்களை பயன்ப்படுத்தி நிலையான, வளமான, ஒன்றுபட்ட நாடாக இலங்கை திகழ நீங்கள் பாடுபட வேண்டும்.
ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் நடந்துள்ள தேர்தல் அளித்திருக்கும் முடிவுகள் மகிழ்ச்சியளிக்கிறது. மக்களால் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ச, இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியில் அளித்திருக்கும் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளார்.
முந்தைய காலகட்டத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு தங்களது அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணையின் மூலம் மட்டுமே இலங்கை கண்ட மீறல்கள் வெளிச்சத்துக்கு தெரியவரும். அப்போது இலங்கை மக்களுக்கு பிரகாசமான, அமைதியான எதிர்காலம் அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்டப் போரின் போது அந்நாட்டு ராணுவம் மனித உரிமைகளை மீறியதாகவும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் புகார்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் முடிவு வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின்படி, கடந்த 2009-ல் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் 30,000 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT