Published : 08 Sep 2014 11:21 AM
Last Updated : 08 Sep 2014 11:21 AM

என்.டி.ஆர். கேன்டீனுக்கு ஆந்திர சட்டமன்றம் அனுமதி

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை போன்று, ஆந்திரத்தில் என்.டி.ஆர் கேன்டீன் தொடங்கும் மாநில அரசின் முடிவுக்கு அம்மாநில சட்டமன்றம் சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

தமிழகத்தில் அம்மா உணவகம் வெற்றிகரமாக செயல்படுவதை அறிந்த, என்.சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு இதேபோன்று தங்கள் மாநிலத்தில் என்.டி.ஆர். கேன்டீன் தொடங்க முடிவு செய்தது. இதையடுத்து மாநில பொது விநியோகத் துறை அமைச்சர் பரிடால சுனிதா தலைமையிலான குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஆய்வு மேற்கொண்டது.

இதுதொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, 3 அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தலாம் என தீர்மானித்தது. இதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 160 கோடி செலவாகும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்தை முதற்கட்டமாக, திருப்பதி, அனந்தபூர், விசாகப்பட்டினம், குண்டூர் ஆகிய 4 மாவட்டங்களில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பதியில் 5, அனந்தபூரில் 5, விசாகப்பட்டினத்தில் 15, குண்டூரில் 10 என மொத்தம் 35 இடங்களில் வெள்ளோட்டமாக என்.டி.ஆர் கேன்டீன் தொடங்க இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் காலையில் இட்லி, உப்புமா ஆகிய சிற்றுண்டிகளும், மதியம் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் ஆகியவையும் இரவு சப்பாத்தியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இதை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு ஆதரவாக ஆந்திர சட்டமன்றத்தில் சனிக்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அவையின் ஒப்புதல் பெறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x