Published : 04 Mar 2015 10:41 AM
Last Updated : 04 Mar 2015 10:41 AM
ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்ததன் கார ணமாக பங்குச் சந்தைகளின் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் நேற்று காலையில் தொடங்கிய இந்த உற்சாகம் மாலை வரை நீடிக்காமல் வர்த்தகம் சரிவுடன் முடிந்தது. உற்சாக மிகுதியால் ஏற்றமடைந்த பங்குச்சந்தை, லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகரித்ததால் சரிவுடன் முடிவடைந்தது. நான்கு நாள் தொடர் ஏற்றத்துக்குப் பிறகு பங்குச் சந்தைகள் நேற்று சரிந்தன.
வர்த்தகத்தின் ஆரம்பத்தில் சென்செக்ஸ் 431 புள்ளிகள் உயர்ந்து அதிகபட்சமாக 30024 புள்ளியை தொட்டது. சென்செக்ஸ் 30,000 புள்ளிகளுக்கு மேலே செல்வது இதுதான் முதல் முறையாகும். இதே போல நிப்டியும் முதல் முறையாக 9100 புள்ளிகளை கடந்தது. வர்த்தகத்தின் இடையே 122 புள்ளிகள் உயர்ந்து 9119 புள்ளியை தொட்டது.
ஆனால் லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகரித்ததால் சந்தை சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 213 புள்ளிகள் சரிந்து 29380 புள்ளியிலும் நிப்டி 73.6 புள்ளிகள் சரிந்து 8922 புள்ளியிலும் முடிவடைந்தது. சென்செக்ஸின் அதிகபட்ச புள்ளியிலிருந்து 644 புள்ளிகள் வரை சரிந்தது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்து முடிந்தன. இதற்கிடையே செவ்வாய்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 773 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
சென்செக்ஸ் பங்குகளில் பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி, சன் பார்மா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன. மற்ற 24 பங்குகளும் சரிந்தன. ஹெல்த்கேர், எப்எம்சிஜி மற்றும் ரியால்டி துறை குறியீடுகளை தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் சரிந்து முடிந்தன. குறிப்பாக மெட்டல், வங்கி ஆகிய குறியீடுகள் சரிந்து முடிந்தன.
பேங்க் நிப்டி குறியீடு நேற்றைய வர்த்தகத்தின் உச்ச பட்ச புள்ளியிலிருந்து 900 புள்ளி கள் வரை சரிந்து முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT