Last Updated : 26 Mar, 2015 08:09 AM

 

Published : 26 Mar 2015 08:09 AM
Last Updated : 26 Mar 2015 08:09 AM

உலகக் கோப்பையை வெல்ல இந்தப் படை போதாதா?

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆக்லாந்தில் ரன் மழை பெய்துகொண்டிருந்த போது சிட்னியில் வான்மழை கொட்டிக்கொண்டிருந்தது. இரண்டாவது அரையிறுதி நடக்க விருக்கும் இந்த மைதானம் எப்போதுமே சுழல் பந்துக்குச் சாதக மாக இருக்கும் என்பதால் இந்தியா வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் மழை அதிகமாகப் பெய்தால் ஆடுகளம் பாதிக்கப்பட்டுச் சுழல் சாதகம் கைநழுவிப் போகும் என்றும் சொல்லப்படுகிறது. ஆடுகளத்தில் சுழல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியா நம்பிக்கையுடன் களம் இறங்கக் காரணங்கள் இருக்கின்றன.

பெரும் எதிர்பார்ப்பு

நியூஸிலாந்துக்கும் தென்னாப் பிரிக்காவுக்கும் இடையே நடந்த அரையிறுதிப் போட்டி முடிந்ததும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் திருப்தியாக உணர்ந்தார்கள். உலகக் கோப்பையின் பெரும் பாலான போட்டிகள் உப்புச் சப்பில் லாமல் கடந்துபோன நிலையில், காலிறுதிப் போட்டிகள் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டன. அவையும் சுரத்திழந்துபோனதால் சலிப்புற்ற ரசிகர்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்தது இந்தப் போட்டி. ஏகப்பட்ட திருப்பங்களுடன் இரு பக்கமும் மாறிமாறி ஊசலாடிக் கொண்டிருந்த போட்டி கடைசி வரை நகத்தைக் கடிக்கவைத்தது. இது இந்திய ஆஸ்திரேலியப் போட்டி குறித்த எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.

ஆஸியின் ஆதிக்கம்

மட்டையாட்டம், பந்து வீச்சு, களத்தடுப்பு, ஆட்டத்தின் வியூகங்கள், சீரான ஆட்டத்திறன், ஒவ்வொருவரும் பொறுப்பேற்று ஆடும் தன்மை, ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் கிட்டத்தட்ட இணையாக இன்னொரு மாற்று ஆட்டக்காரர் இருப்பது, உடல்திறன் எனப் பல்வேறு அம்சங்களில் இந்தியாவை விடப் பல மடங்கு திறமை பெற்றது ஆஸ்திரேலியா.

இப்போது மட்டுமல்ல. கடந்த 25 ஆண்டுகளாகவே இதுதான் நிலை. சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற சிலரது அபாரமான பங்களிப்பால் இந்தியா சில சமயம் வென்றிருக்கிறது. மற்றபடி ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே எப்போதும் மேலோங்கியிருக்கும். அண்மையில் ஆஸ்திரேலி யாவுக்கு எதிராக இந்தியா ஆடிய ஒருநாள் போட்டிகளிலும் இதுதான் நடந்தது.

ஆஸியின் ஓட்டைகள்

எனினும் உலகக் கோப்பையில் இந்தியாவின் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் மீதான நம்பிக்கை சற்றே ஆட்டம் கண்டிருக்கிறது. எவ்வளவுதான் சிறந்த அணியாக இருந்தாலும் ஆஸியின் கோட்டையில் உள்ள ஓட்டைகளை இந்தத் தொடர் அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆஸியின் மட்டை வீச்சு வலு வானதுதான் என்றாலும் 2010-க்கு முன்பு இருந்த வலிமையை அது இன்னமும் பெறவில்லை என்பதே நிதர்சனம். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறந்த வேகப் பந்துக்கு எதிராக 151 ரன்னுக்குச் சுருண்டது. பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் ஆஸி மட்டையாளர் களை மிரட்டினார். ரியாஸுக்கு இணையாக இன்னொரு வீச்சாளர் இருந்திருந்தால் ஆஸி காலிறுதி யைத் தாண்டியிருப்பதே சந்தேகம் தான். சுழல் பந்துக்கு எதிராக ஆஸி மட்டையாளர்கள் அத்தனை வலுவானவர்கள் அல்ல என்பது தெரிந்ததுதான்.

பலவீனம்

எந்தப் போட்டியையும் வெல்லக் கூடிய ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மைக்கேல் கிளார்க், மேக்ஸ்வெல் ஆகிய மட்டையாளர்கள் இருக்கிறார்கள். என்றாலும் ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன், ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹசி போன்ற தலை சிறந்த மட்டையாளர்கள் யாரும் இல்லை. இப்போதுள்ள மட்டையா ளர்களில் தனித்து நிற்பவர் ஸ்மித் மட்டுமே. மற்றவர்கள் தேர்ச்சியில் அல்லது தற்போதைய ஆட்டத் திறனில் அவ்வளவு சிறப்பாக இல்லை. இது ஆஸியின் முக்கிய மான பலவீனம். ஆனால் மிகச் சிறந்த பந்து வீச்சுக்கு எதிராக மட்டுமே இந்தப் பலவீனம் அம்பலமாகும்.

இந்திய பந்துவீச்சு

இந்திய வேகப் பந்து வீச்சு ஆகச் சிறந்தது அல்ல என்றாலும் அது கணிசமாக மேம்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் இருந்த தடுமாற்றம் இப்போது இல்லை. கட்டுக்கோப்பு, வேகம் ஆகியவற்றில் முன்னேற்றம் தெரிகிறது. எகிறு பந்துகளைப் போடும் விதம் கணிசமாக மாறியிருக்கிறது. சிட்னி மைதானம் சுழலுக்குக் கைகொடுக்கும் என்பதும் இந்தியாவுக்குச் சாதகம்.

ஆஸ்திரேலியப் பந்து வீச்சு வலிமையானதாகவே இருந்தாலும் 1999 முதல் 2007வரை மிரட்டிய வீச்சணி இன்று இல்லை. மிட்செல் ஜான்சனின் வேகத்தில் இப்போது போதிய கூர்மை இல்லை. மிட்செல் ஸ்டார்க் மட்டுமே துல்லியமாகவும் வேகமாகவும் வீசிவருகிறார். நல்ல சுழலர் யாரும் இல்லாததும் சிட்னி மைதானத்தைப் பொறுத்தவரை பெரிய குறைதான்.

இந்தியா இந்த ஆண்டு ஆஸி அணியிடம் தோல்வி மேல் தோல்வி கண்டாலும் அதன் தோல்விகள் பெரும்பாலும் பந்து வீச்சின் பலவீனத்தால் விளைந்தவை. மட்டை வீச்சு பெருமளவுக்கு ஆஸியின் தாக்குதலைச் சமாளித்தது. சில சமயம் பிரகாசிக்கவும் செய்தது. ஆஸ்திரேலியாவில் பல ஆட்டங்கள் ஆடிய அனுபவமும் மட்டையாளர்களின் தற்போதைய ஆட்டத் திறனும் ஆஸி வீச்சணியின் பலவீனமும் இந்தியாவுக்குக் கை கொடுக்கும் என்று நம்பலாம்.

உலகின் எந்த அணியையும் எந்தச் சூழலிலும் வெல்லக்கூடிய அணியாக ஆஸ்திரேலியா திகழ்ந்தாலும் அதை வெல்லக்கூடிய சில அம்சங்கள் இந்தியாவிடம் உள்ளன. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சும் மட்டைத் திறனும் அதன் உச்ச நிலையோடு ஒப்பிடும் அளவுக்கு இன்று இல்லை. இந்தியாவின் பந்து வீச்சு மேம்பட்டிருக்கிறது. மட்டை வலு கூடியிருக்கிறது.

வரலாற்றிலிருந்து இந்தியா நம்பிக்கை பெறலாம். இதேபோன்ற இளைஞர்கள் கொண்ட அணி 2008-ல் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் மூன்று முறை வென்றது. முத்தரப்புத் தொடரில் ஐந்து முறை இந்த அணிகள் மோதின. மூன்றில் இந்தியா வென்றது. சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் மட்டுமே அந்த அணியின் மூத்த வீரர்கள். மூன்றில் ஒரு போட்டியில் மட்டுமே வீரேந்திர சேவாக் ஆடினார். ஆஸ்திரேலியாவில் கில்கிறிஸ்ட், பாண்டிங், மைக் ஹசி, பிரெட் லீ ஆகியோர் இருந்தார்கள். வெற்றிகளில் சச்சின் டெண்டுல்கரின் (44, 117, 91) பங்கு மிக முக்கியமானது என்றாலும் ரோஹித் ஷர்மாவும் (39, 66, 2) முக்கியப் பங்கு வகித்தார். ஷாந்த், பிரவீண் குமார், இஷாந்த் ஷர்மா ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசினார்கள். தோனி ஒரு நாள் போட்டிகளில் தலைமை ஏற்ற முதல் தொடர் அது.

சச்சினைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அன்றைய இந்திய அணியை விட இன்றைய அணி வலுவானதுதான். அன்றைய ஆஸ்திரேலிய அணியைவிட இன்றைய ஆஸ்திரேலிய அணி வலுவானதல்ல. எனவே இந்தியா தன்னம்பிக்கையுடன் தன்னுடைய திறமையைப் பதற்றமில்லாமல் வெளிப்படுத்தினாலே போதும். வரலாறு திரும்பலாம்.

நான்கு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய அணியினர் இன்னும் நான்கு நாட்கள் கழித்து வீடு திரும்பினால் அந்தப் பயணம் அவர்களது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x