Published : 26 Mar 2015 10:15 AM
Last Updated : 26 Mar 2015 10:15 AM

வேளாண் துறை நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல: விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வேதனை

தமிழக அரசின் 2015-16 ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.6,613 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு போதுமானதல்ல என தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ‘தி இந்து’விடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தின் மொத்த செலவினமான ரூ.1.47 லட்சம் கோடியில் வேளாண்மைத் துறைக்கு ரூ.6,613 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயம் மாநிலப் பட்டியலில்தான் வருகிறது. எனவே, இந்த துறைக்கு கூடுதல் ஒதுக்கீட்டை மாநில அரசுகளும் செய்ய வேண்டும்.

பட்ஜெட்டில் 20 சதவீதம் விவசா யம் மற்றும் அதைச் சார்ந்த துறை களுக்கு ஒதுக்க வேண்டும். இதில் 10 சதவீதத்தை உணவுப் பொருட்கள் உற்பத்திக்கும், 10 சதவீதத்தை பயிர்க் காப்பீடு உள்ளிட்ட விவசாயிகளின் நலன்களுக்காகவும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். நிகழாண்டில் கர்நாடக அரசு ரூ.12,956 கோடி நிதியை பாசன கட்டமைப்புகளை மேம்படுத் துவதற்காக ஒதுக்கியுள்ளது. தமிழக அரசும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.

தமிழக பட்ஜெட்டிலும், மத்திய அரசின் பட்ஜெட்டிலும் விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளை பாதுகாக்கவும் போதிய அம்சங்கள் இல்லாதது ஏமாற்றம்தான். கிராம அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்கு தகுந்தாற்போல நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே வளர்ச்சி அடிமட்டத்திலிருந்து ஏற்படும் என்றார்.

தனி பட்ஜெட் வேண்டும்

காங்கிரஸ் விவசாயப் பிரிவு திருச்சி மாவட்டத் தலைவர் ஜி.கே.முரளிதரன் கூறியதாவது: விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை போதுமானதல்ல. தரமான உரம், தரமான விதைகள், உற்பத்திப் பொருளுக்கு உரிய விலை என எதுவும் கிடைக்கவில்லை.

விவசாயம் செய்ய முடியாத சூழலில் அதிகபட்ச தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டிய இந்த காலகட்டத்தில், ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தில் கவலைப்படாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்பட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x