Published : 20 Dec 2014 09:43 AM
Last Updated : 20 Dec 2014 09:43 AM

புதுச்சேரியில் தற்கொலை செய்து கொண்ட 3 பெண்களின் உடல்கள் தகனம்

புதுச்சேரியில் நேற்றுமுன்தினம் தற்கொலை செய்துகொண்ட 3 பெண்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு போலீஸாரே முன்னின்று இறுதி சடங்குகள் நடத்தி தகனம் செய்தனர்.

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் பொகாரா பகுதியைச் சேர்ந்த ஹேமலதா, ஜெயஸ்ரீ, அருணஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நிவேதிதா ஆகிய 5 பேரும் கடந்த 17-ம் தேதி வெளியேற்றப்பட்டனர். இதனால், விரக்தியடைந்த சகோ தரிகள் 5 பேரும் தங்கள் பெற்றோர் பிரசாத், சாந்திதேவி ஆகியோ ருடன் காலாப்பட்டு பகுதியில் உள்ள கடலில் குதித்தனர். அதில், அருணஸ்ரீ(52), ராஜ்யஸ்ரீ(48), தாயார் சாந்திதேவி ஆகிய 3 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந் தனர். ஹேமலதா உள்ளிட்ட 4 பேர் மீட்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.

இறந்தவர்களின் உடல்கள் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கின. இந்த நிலையில், உயிர் தப்பிய ஹேமலதா, நிவேதிதா ஆகிய இருவரையும் புதுச்சேரி வடக்கு எஸ்பி ரவிக்குமார் மற்றும் போலீஸார் நேற்று காலையில் சந்தித்தனர். பின்னர், அவர்களை காலாப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களின் அனுமதியோடு 3 பேரின் உடல் களும் பிரேத பரிசோதனை செய் யப்பட்டன.

பிரேத பரிசோதனை முடிந்ததும் 3 உடல்களையும் புதுச்சேரி போலீஸார் எடுத்து வந்து அந்த 2 சகோதரிகள் மற்றும் தந்தை பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இறுதிச் சடங்குகளை செய்து, கருவடிக் குப்பம் இடுகாட்டில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு எரித்தனர். இதற்கிடையே, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹேமலதா அளித்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நேற்றும் தொடர்ந்த ஆர்ப்பாட்டம்

ஆசிரமத்தில் இருந்து வெளி யேற்றப்பட்ட 3 பெண்கள் தற்கொலை செய்த சம்பவத்தால் புதுச்சேரியில் நேற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தன. ஹேமலதா மற்றும் அவரது சகோ தரிகள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு நேற்று பொதுமக்கள் திரண்டு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஆசிரமத்தை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்றும் ஆசிரமத்துக்காக புதுச்சேரியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், ஆசிரமத்தினுள் நுழைய முற்பட்ட அவர்களை முத்தியால்பேட்டை மற்றும் சோலைநகர் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆசிரமம் மீதும் ஆசிரமத்துக்கு சொந்தமான காகித ஆலை மீதும் பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். பின்னர், படேல் சாலை, ஆம்பூர் சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.

இதேபோல், இந்திய மாணவர் சங்கம் சார்பாக அதன் தலைவர் ரஞ்சித் தலைமையில் இசிஆர் சாலையில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் போராட்டத்தால் இசிஆர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x