Published : 09 Oct 2014 11:11 AM
Last Updated : 09 Oct 2014 11:11 AM

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இரவு முழுவதும் தொடர் தாக்குதல்: கிராமவாசிகள் 5 பேர் காயம்

ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவு முழுவதும் நடத்திய தொடர் தாக்குதலில் எல்லையோர கிராமவாசிகள் 5 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஒரு வார காலத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த திங்கள்கிழமை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்முவின் ஆர்னியா பகுதியில் 5 பேர் கொல்லப்பட்டனர். 34 பேர் காயமடைந்தனர். கடந்த 3-ம் தேதி குல்மார்க், ஜம்மு, பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், 4-வது நாளாக, புதன்கிழமை இரவு முழுவதும் பாகிஸ்தான் தாக்குதல் தொடர்ந்துள்ளது.

குறிப்பாக சம்பா மாவட்டம் ராம்கர் பகுதி, அக்னூர், அர்னியா, கனக்சக் ஆகிய பகுதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த 5 பேரும், ஜம்மு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்லையில் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திரா சிங் எல்லையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருவதாக கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x