Published : 24 Sep 2014 03:12 PM
Last Updated : 24 Sep 2014 03:12 PM

கவுண்ட்டி கிரிக்கெட்டில் பந்தைக் கையால் தடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் டெர்பிஷயர் அணிக்கு விளையாடி வரும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மென் புஜாரா விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார்.

லீஷயர் அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டி நேற்று டெர்பி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற லீஷயர் அணி முதலில் டெர்பியை பேட் செய்ய அழைத்தது.

4ஆம் நிலையில் களமிறங்கிய புஜாரா 28 நிமிடங்கள் ஆடினார், 21 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் 20வது ஓவரில் லீஷயரின் இடது கை மீடியம் ஃபாஸ்ட் பவுலர் அடிஃப் ஷேய்க் பந்து வீசினார்.

அந்த ஓவரின் கடைசி பந்தை ஷெய்க் வீச புஜாரா பந்தைக் கையால் தட்டி விட்டதாக நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டார். அதாவது பந்தைத் தடுத்தாடியுள்ளார் புஜாரா ஆனால் பந்து ஸ்டம்பிற்குள் செல்லும் போல் தெரிந்தவுடன் கிளவ்வினால் பந்தைத் தட்டி விட்டார். உடனடியாக லீஷயர் வீரர்கள் முறையீடு செய்தனர்.

நடுவர்கள் இருவரும் கலந்தாலோசித்த பிறகு புஜாரா அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.1996ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் ஹேண்டில்ட் த பால் முறையில் அவுட் ஆவது புஜாராதான்.

அப்போதும் இதே டெர்பி அணியைச் சேர்ந்த கார்ல் கிரைக்கன் என்ற வீரர் இந்தியாவுக்கு எதிராக இதே மைதானத்தில் பந்தைக் கையால் பிடித்து ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 7 பேட்ஸ்மென்கள்தான் பந்தைக் கையால் பிடித்த முறையில் ஆட்டமிழந்துள்ளனர். முதல் தர கிரிக்கெட்டில் ஹேண்டில்ட் த பால் முறையில் ஆட்டமிழந்த 59வது வீரரானார் புஜாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x