Published : 08 Aug 2014 09:28 AM
Last Updated : 08 Aug 2014 09:28 AM
சென்னை நகரில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் வியாழக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளில் சென்னை மாநகரில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. வழிப்பறி, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, கொலைகள் என அனைத்து வகை குற்றங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. குண்டர் சட்டத்தின் கீழ் 2012-ல் 2173 பேரும், 2013-ல் 900 பேரும், 2014-ல் 812 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் 234 பேர் செயின் பறிப்பு சம்பவங்களுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்.
சென்னை மாநகரின் பாது காப்பை அதிகரிக்க ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளன. இதற்காக 135 போலீஸ் நிலையங்களில் 403 இரு சக்கர வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் மட்டும் செய்யப்படுகின்றன. தினமும் மூன்று ஷிப்ட் முறையில் ரோந்து பணிக்கென தனி போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் 30 இடங்களுக்கு சென்று ரோந்து பணி போலீஸார் கையெழுத்து இடவேண்டும். இதற்காக 'பாய்ண்ட் புக்' என்ற புதிய புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாய்ண்ட் புக் வைப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஏடிஎம் மையங்கள் என 19 வகையான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் வைக்கப்படும் பாய்ண்ட் புத்தகங்களில் ரோந்து பணி போலீஸார் தினமும் 3 முறை கையெழுத்திட வேண்டும்.
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ஈரானியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமாரை கொலை செய்ததாக 3 பேரையும், இந்த கொலை குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 3 பேரையும் பெங்களூரில் வைத்து சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை வியாழக் கிழமை காலையில் சென்னை கொண்டு வந்து விட்டோம். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT