Published : 28 Apr 2015 10:10 AM
Last Updated : 28 Apr 2015 10:10 AM
வாரத் தொடக்க நாளான நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் 1 சதவீத அளவுக்கு சரிவைச் கண்டன. எண்ணெய் மற்றும் எரிவாயு, பார்மா, எப்எம்சிஜி மற்றும் வங்கித்துறை பங்குகள் கடும் பாதிப்பைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 260 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 27176 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி 91 புள்ளிகள் சரிந்து 8213 புள்ளிகள் முடிந்துள்ளது. கடந்த மூன்றரை மாதங்களில் சந்தையின் மிகப்பெரிய சரிவு இது. 9 நாட்களில் சந்தை 6.5 சதவீத சரிவைக் கண்டு 1867 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அனைத்து முக்கிய துறை பங்குகளும் வீழ்ச்சி கண்டன. ஹெல்த்கேர் துறை பங்குகள் கடுமையான சரிவு கண்டது. நேற்றைய வர்த்தகத்தில் முக்கிய நிறுவனங்களான பிபிசிஎல் 6.18%, கெய்ர்ன் இந்தியா 4.66%, ஆசியன் பெயிண்ட்ஸ் 3.44%, பிஹெச்இஎல் 3.29%, எஸ்பிஐ 3.08% இறக்கத்தைக் கண்டன.
மாருதி சுஸூகி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் நேற்று 107 ரூபாய் வரை விலை ஏற்றம் கண்டது. நேற்றைய வர்த்தகத்தில் மாருதி சுஸூகி 3.02 %, வேதாந்தா 2.49%, விப்ரோ 2.03%, ஐடியா செல்லுலார் 1.73% பஞ்சாப் நேஷ்னல் வங்கி 1.30% பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்தன.
அந்நிய நிறுவன முதலீட்டா ளர்கள் தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பதன் காரணமாக சந்தை சரிந்து வருகிறது. கடந்த எட்டு வர்த்தக நாட்களில் 650 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். குறைந்தபட்ச மாற்று வரி தொடர்பாக தீர்வு எட்டப்படாத நிலையில் சந்தை சரிவு தொடர்வதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த ஆண்டு பருவமழை குறையும் என்கிற இந்திய வானிலை துறையின் அறிவிப்பு மற்றும் பல நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகள் காரணமாக முதலீட்டாளர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
நேற்றைய நிலவரத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றமான சூழல் நிலவியது. ஆசிய சந்தைகளில் ஏற்ற இறக்கமான நிலவரம் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT