Published : 26 Feb 2015 03:50 PM
Last Updated : 26 Feb 2015 03:50 PM
தொலைநோக்குப் பார்வையில்லாத, புதிய திட்டங்கள் இல்லாத வகையில் ரயில்வே பட்ஜெட் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தினேஷ் திரிவேதி ஆகிய இருவரும் 'ரயில்வே பட்ஜெட் கனவு போல் உள்ளது. அதில் உறுதியான அறிவிப்புகள் ஏதும் இல்லை' என தெரிவித்துள்ளனர். இருவருமே ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.
நாடாளுமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, "பட்ஜெட் உரை நேர்த்தியான வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் தொலைநோக்குப் பார்வையில்லை.
ரயில்வே அமைச்சர் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், பில்ட் ஆபரேட் டிரான்ஸ்பர் முறை ஊக்குவிக்கப்படும் என பேசியிருக்கிறார். அடுத்தவரை நம்பியிருந்தால் எப்படி இலக்குகளை அடைய முடியும். புதிய ரயில்கள் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. வளர்ச்சி என்பது குட்டையில் நிற்கும் தேங்கிய நீர் போல் இல்லாமல் தெளிவான நீரோட்டமாக இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
தினேஷ் திரிவேதி கூறும்போது, "பட்ஜெட் என்ற பெயரில் கனவுகளைப் பற்றி பேசியிருக்கிறார் அமைச்சர். நிலாவுக்கு செல்ல வேண்டும் என்பது கனவு, எப்படிச் செல்வது என்பதே திட்டம். இங்கு கனவு சொல்லப்பட்டிருக்கிறது. கனவை நனவாக்க திட்டம் ஏதுமில்லை. கஜானா காலியாக இருக்கும் ஏர் இந்தியா பாதையில் ரயில்வே துறையும் சென்று கொண்டிருக்கிறது" என்றார்.
பிஜு ஜனதா தள கட்சித் தலைவர் தத்தகாடா சட்பதி கூறும்போது, "ரயில்வே பட்ஜெட் வெற்றறிக்கை. ஏமாற்றம் அளிக்கும் அறிக்கை. 10-க்கு 2 மதிப்பெண்கள் மட்டுமே தருவேன். ரயில்வே அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை முன்வைத்தார். ஆனால், அவற்றை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை சொல்லாமல் விட்டுவிட்டார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT