Published : 04 Feb 2015 08:31 AM
Last Updated : 04 Feb 2015 08:31 AM
ஸ்ரீரங்கம் தொகுதியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.ஆனந்த் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வேட்பாளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள் ளது. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தேன். ஆனால் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யானது.
எனவே, இந்தத் திருத்தங் களை மேற்கொண்டு அதற்கான தனிப் பட்டியல் வெளியிடுவதுடன், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடியில் வாக்க ளிக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும் தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சனும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 பிரிவு 23-ன்படி வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த பிறகு வாக்காளர் பட்டியலில் எவ்வித திருத்தமும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
புதிய பட்டியல்
மேலும், மேற்கண்ட சட்டங் களுக்கு முரண்படாமல் ஸ்ரீரங்கம் தொகுதியில் இல்லாதவர்கள், இடம் மாறிச் சென்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர் கொண்ட பட்டியலும், ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் பெயரை நீக்கிவிட்டு தயாரிக்கப்படும் பட்டியலும், தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குப்பதிவுக்கான பிரதிநிதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை பதிவு செய்துகொண்டு இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT