Published : 05 Feb 2015 01:55 PM
Last Updated : 05 Feb 2015 01:55 PM
சட்டக் கல்லூரி மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துவதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 120 ஆண்டுகள் பழமையான டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இரண்டாகப் பிரித்து திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மாற்றப்படும் என்ற தகவல் வெளியானதால், சட்டக்கல்லூரி மாணவர்கள் தற்போது செயல்படும் இடத்திலேயே சட்டக் கல்லூரியை செயல்பட வேண்டும் என்றும் வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்றும் நியாமான கோரிக்கையை முன்வைத்து கடந்த இரண்டு நாட்களாக போராடி வருகின்றனர்.
நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தலைமைச் செயலாளரை சந்தித்து மனுகொடுக்க முடிவெடுத்து சென்னை பாரிமுனையிலிருந்து ஊர்வலமாக கோட்டை நோக்கி சென்றனர். தலைமைச்செயலாளரின் பதிலில் திருப்தியடையாத மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியது. தாக்குதலில் படுகாயமடைந்த 14 மாணவர்கள் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நியாயமான கோரிக்கைளுக்காக போராடிய சட்டக் கல்லூரி மாணவர்களை தாக்கிய காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அனைத்து விதமான நீதிமன்றங்களும் உள்ளன. எனவே, சட்டக் கல்லூரி இங்கு இருந்தால்தான் மாணவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிக்க முடியும், பயிற்சி எடுக்க முடியும். எனவே, சட்டக் கல்லூரியை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே செயல்படுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமெனனில், போராடும் சட்டக் கல்லூரி மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT