Published : 21 Jan 2015 09:21 AM
Last Updated : 21 Jan 2015 09:21 AM
காஞ்சிபுரத்தை அடுத்த சிறுனை காலனி பகுதி மக்கள், ஊராட்சி நிர்வாகம் விநியோகிக்கும் குடிநீரைப் பருகுவதால் அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, சுகாதாரத் துறையினர் அந்தப் பகுதியில் நேற்று மருத்துவ முகாம் நடத்தி காலனிவாசிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிறுனை காலனி பகுதியில் 800-க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீரை குழாய்கள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
அந்தத் தண்ணீரை குடித்த காலனிவாசிகள் அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்கு, குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதே காரணம் என்றும் புகார் எழுந்தது.
இதுகுறித்து கடந்த 4-ம் தேதி ‘தி இந்து’ செய்தி வெளியிட்டது. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தி, கழிவுநீர் கால்வாய் மற்றும் குடிநீர்க் குழாய்களை சீரமைக்குமாறு ஊராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அளித்தனர்.
தொடர்ந்து, நேற்று மருத்துவ முகாமை நடத்தி காலனிவாசிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும், சிறுனை காலனி பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீர் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும், அதன் முடிவு வந்த பிறகே நோய் பாதிப்புக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT