Published : 03 Oct 2014 03:01 PM
Last Updated : 03 Oct 2014 03:01 PM

வைகோ வீடு அருகே அதிமுக-வினர் உண்ணாவிரதம் - கலிங்கப்பட்டியில் கல் வீச்சு: 6 பேர் காயம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அதிமுக-வினர் நேற்று மேற்கொண்ட உண்ணாவிரதத்தின்போது, அக்கட்சியினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், நாற்காலிகள் வீசியதில், 6 பேர் காயமடைந்தனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

11 இடங்களில்

நேற்று மதிமுக பொதுச் செய லாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில், அவரது வீட்டின் அருகே அதிமுக வினர் உண்ணாவிரதம் இருந்தனர். மதியம் 1.30 மணியளவில் கடைய நல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையா பாண்டியன் பேசிய போது, வைகோ குறித்து விமர்சித்தார்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அதிமுகவினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பந்தலில் இருந்தவர்கள் நாற்காலிகளை தூக்கி வீசியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் செங்கற்களை வீசினர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

சமாதானம்

இச்சம்பவத்தில் அதிமுகவைச் சேர்ந்த இருவர் மற்றும் கலிங்கப் பட்டியைச் சேர்ந்த ஜோதி என்பவர் உள்ளிட்ட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த டி.எஸ்.பி. கலிவரதன் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து வந்து மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுத்து, சமாதானம் செய்தனர்.

வைகோவின் தம்பி ரவிச்சந்தி ரன், மதிமுக மாநில மாணவரணிச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமதுஅலி ஆகியோரும் அங்கு வந்து மக்களை சமாதானம் செய்தனர்.

காயமடைந்தவர்கள் அங் குள்ள மருத்துவமனையில் முத லுதவி சிகிச்சை பெற்று திரும்பினர். இதையொட்டி, அப்பகுதியில் திரளான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் போலீஸில் புகார் செய்தனர்.

வைகோ பேட்டி

மோதல் குறித்து தகவல் அறிந்த வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து, அங்கிருந்து கார்மூலம் ஊருக்கு வந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

பொடாவில் 19 மாதங்கள் சிறையில் இருந்தபின் விடுதலை யாகி சொந்த ஊருக்கு வந்தபோது, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என்னை வரவேற்றனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய நான், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையோ, அரசையோ விமர்சித்து பேசவில்லை. இந்த வரவேற்புக்குப் பின் என்னை சந்தித்த கிராம மக்கள் எனது பேச்சு கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஒற்றுமை குலைக்க வேண்டாம்

ஆனால், கொள்கைரீதியான எங்கள் நிலைப்பாட்டை குறித்து மட்டுமே நான் பேசியிருந்தேன். கலிங்கப்பட்டியில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இக்கிராமத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகை யில் யாரும் இருக்க கூடாது, இங்கு அமைதி கெடக்கூடாது என்பதே எனது நோக்கம் என்றார் அவர்.

கலிங்கப்பட்டியில் போராட்டம் நடத்த அனுமதி அளித்த போலீ ஸார், போராட்ட பந்தலை வைகோ வீடு அருகே அமைக்க அனுமதி அளித்ததே பிரச்சினைக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x