Published : 23 Aug 2014 08:45 AM
Last Updated : 23 Aug 2014 08:45 AM

சர்க்கரை மீதான இறக்குமதி வரி உயர்வு: விலை உயரும் அபாயம்

மத்திய அரசு சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. கச்சா சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகிய இரண்டுக்கும் இந்த வரி விதிப்பு உயர்வு அடங்கும். இதனால் சில்லறை விற்பனையில் சர்க்கரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உணவு அமைச்சகம் சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 40 சதவீதம் உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் நிதி அமைச்சகம் 25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதிகமாக வரி விதித்தால் அது பணவீக்க உயர்வுக்கு வழிவகுக்கும் என்று கருதி குறைவாக உயர்த்தியுள்ளதாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு உதவும் வகையில் இத்தகைய வரி உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்போது சர்க்கரை விலை கிலோ ரூ. 34 முதல் ரூ. 40 என்ற விலையில் விற்பனையாகிறது. உபரியாக சர்க்கரை கையிருப்பில் உள்ளதால் சர்க்கரை விலை உயரவில்லை.

சர்க்கரை விற்பனை விலை உற்பத்தி விலையை விட குறை வாக இருப்பதால் சர்க்கரை ஆலை களின் லாபம் குறைந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சர்க்கரை ஆலைகளில் ஒரு கிலோ சர்க்கரை ரூ. 30.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி விலை ரூ. 37 ஆக உள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ. 28.50 ஆக உள்ளது. ஆனால் அங்கு உற்பத்தி விலை ரூ. 31 ஆகும்.

வரவேற்பு

இறக்குமதி வரி உயர்த்தப் பட்டதற்கு இந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது ஆலைகளில் பணப் புழக்கம் அதிகரிக்க வழியேற்படுத்தும் என்று சங்கத்தின் இயக்குநர் அவினாஷ் வர்மா தெரிவித்தார்.

சர்க்கரை ஆலை அதிபர்கள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 6,800 கோடியாகும். இதில் உத்தரப் பிரதேச மாநில ஆலைகள் வைத்துள்ள பாக்கித் தொகை மட்டும் ரூ. 5 ஆயிரம் கோடியாகும்.

இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக சர்க்கரை ஆலை அதிபர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இறக்குமதி வரி உயர்வு காரணமாக விலை குறைவான சர்க்கரை இந்தியாவிற்குள் நுழைவது தடுக்கப்படும் என்று கூறி வந்தனர். இறக்குமதி வரி 40 சதவீத அளவுக்கு இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். எதிர்காலத்தில் சர்வதேச அளவில் சர்க்கரை விலை குறையும்போது 40 சதவீத வரி விதிப்பு இருந்தால் இறக்குமதி செய்வது குறையும் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்தியாவில் இப்போது 25 லட்சம் டன் சர்க்கரை உபரியாக உள்ளது.

உலகிலேயே சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. சர்க்கரை நுகர்வு அளவும் இங்கு அதிகம். இருப்பினும் கடந்த ஆண்டு சர்க்கரை நுகர்வு 4 சதவீதம் சரிந்தது. இப்போதும் உற்பத்தி நுகர்வை விட அதிகமாகவே உள்ளது.

சர்க்கரை பங்குகள் 8% வரை உயர்வு

இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதால் சர்க்கரை நிறுவனப் பங்குகள் அதிகபட்சமாக 8% வரை உயர்ந்தன. துவாரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் பங்கு 7.83 சதவீதம் உயர்ந்தது. பஜாஜ் ஹிந்துஸ்தான் பங்கு 5.32%, ஸ்ரீரேணுகா சுகர்ஸ் 4.44%, அவுத் சுகர் மில்ஸ் 4.64%, திரிவேணி இன்ஜினீயரிங் 3.05%, பல்ராம்பூர் சின்னி 2.21 சதவீதமும் உயர்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x