Published : 04 May 2014 12:34 PM
Last Updated : 04 May 2014 12:34 PM

போலார்ட் விளாசல்; மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது. கடைசி 3 ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், போலார்ட் அதிரடியாக ஆடி 12 பந்துகளில் 28 ரன்கள் சேர்க்க, 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை எட்டியது மும்பை.

இதன்மூலம் 5 தோல்விகளுக்குப் பிறகு இந்த ஐபிஎல் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள் ளது நடப்பு சாம்பியன் மும்பை. அதேநேரத்தில் பஞ்சாப் அணி 5 வெற்றிகளுக்குப் பிறகு முதல் முறையாக தோல்வி கண்டுள்ளது.

மேக்ஸ்வெல் விளாசல்

மும்பை வான்கடே மைதானத் தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் சேவாக் 1 ரன் எடுத்த நிலையில், ரோஹித் சர்மாவின் துல்லியமான “த்ரோ”வில் ரன் அவுட்டாக, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சேதேஷ்வர் புஜாரா 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் வீசிய “வைட்” பந்தை அடித்து கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

இதையடுத்து விருத்திமான் சாஹாவும், மேக்ஸ்வெல்லும் இணைந்தனர். பஞ்சாப் முதல் 6 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே எடுத் திருந்த நிலையில், மேக்ஸ்வெல் அதிரடியில் இறங்கினார். அவர் மலிங்கா ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி, ஹர்பஜன் ஓவர்களில் இரு பவுண்டரிகளை விரட்ட, 10 ஓவர்கள் முடிவில் 70 ரன்களை எட்டியது பஞ்சாப்.

ஹர்பஜன் வீசிய 12-வது ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல்லும், 3-வது பந்தில் சாஹாவும் சிக்ஸர் அடிக்க, 5-வது பந்தில் மேக்ஸ் வெல் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரி களுடன் 45 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த கேப்டன் பெய்லி பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்க, போலார்ட் ஓவரில் ஒரு சிக்ஸரையும், 2 பவுண்டரிகளையும் விரட்டினார் சாஹா.

பெய்லி 15 ரன்களில் வெளியேற, ஜாகீர்கான் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து 43 பந்துகளில் அரைசதம் கண்டார் சாஹா. இதனிடையே மில்லர் 16 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது பஞ்சாப். சாஹா 47 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக் காமல் 59 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து பேட் செய்த மும்பை அணியில் பென் டங்க் 5 ரன்களிலும், அம்பட்டி ராயுடு 8 ரன்களிலும் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சிதம்பரம் கௌதமுடன் இணைந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. ஜான்சன் பந்தில் சிக்ஸர் அடித்து ரோஹித் ரன் கணக்கைத் தொடங்க, சந்தீப் சர்மா வீசிய 5-வது ஓவரில் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார் கௌதம்.

ஆண்டர்சன் அதிரடி

அந்த அணி 70 ரன்களை எட்டியபோது கௌதம் 33 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து கோரே ஆண்டர்சன் களம்புகுந்தார். அதிரடியாக ஆடிய அவர், படேல் வீசிய 13-வது ஓவரின் கடைசி 4 பந்துகளில் ஒரு சிக்ஸரையும், 3 பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். ரோஹித் சர்மா 34 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் ஆண்டர்சன் வெளியேறினார். அவர் 25 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி களுடன் 35 ரன்கள் எடுத்தார்.

தூள் பறத்திய போலார்ட்

இதையடுத்து கிரண் போலார்டும், ஆதித்ய தாரேவும் ஜோடி சேர, கடைசி 3 ஓவர்களில் 41 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. பாலாஜி வீசிய 18-வது ஓவரில் தாரே ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச, 16 ரன்கள் கிடைத்தன.

கடைசி 2 ஓவர்களில் 25 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டபோது, ஜான்சன் வீசிய 19-வது ஓவரை போலார்ட் வெளுத்து கட்டினார். அவர் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விரட்ட, கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. சந்தீப் சர்மா வீசிய அந்த ஓவரின் முதல்பந்தில் போலார்ட் சிக்ஸர் அடிக்க, மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கோரே ஆண்டர்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப் பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x