Published : 11 Nov 2014 09:05 PM
Last Updated : 11 Nov 2014 09:05 PM

வேகப்பந்து வீச்சு ஆட்டக்களங்களில் இந்திய வீரர்கள் சமாதானக் கொடியை தூக்கிப் பிடிப்பர்: ஸ்டுவர்ட் கிளார்க் கேலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் தோனி விளையாட முடியாததை அடுத்து இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரில் அக்கறை இல்லை என்ற தொனியில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சாடியுள்ளது.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஒரு பத்தியில் இந்தியா உலகக் கோப்பையையே எதிர் நோக்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிக நாட்டம் காட்டுவதில்லை என்று அந்தப் பத்தியில் இந்திய அணியைப் பற்றி சாடப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் நடப்பது பிரிஸ்பன் மைதானத்தில், இந்த மைதானம் உலகிலேயே அதிவேக ஆட்டக்களம் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். இதில் 26 ஆண்டுகளுக்கு முன்பாக விவ் ரிச்சர்ட்ஸ் தலைமை மேற்கிந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவை அங்கு எந்த அணியும் வென்றதில்லை என்று அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த தொடரில் பிரிஸ்பனில் டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடவில்லை அப்படியும் 4-0 என்ற தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இங்கிலாந்து மிட்செல் ஜான்சனின் ஆக்ரோஷ பந்து வீச்சில் மைதானத்தில் ரத்தம் சிந்தி தோல்வி கண்டது அதன் பிறகு தொடரில் இங்கிலாந்து நசுக்கப்பட்டது. இந்த முறை இந்தியாவுக்கும் அதே கதி ஏற்படலாம் என்று அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக 1-0 என்று இந்தியா முன்னிலை வகித்தது ஆனால் வேகப்பந்துக்கு சாதகமான அடுத்த 3 ஆட்டங்களில் இந்தியா தோல்வி கண்டது. குறிப்பாக 2 இன்னிங்ஸ் தோல்விகள் என்கிறது அந்த பத்தி.

இந்தப் பத்திக்காக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க்கிடம் கருத்து கேட்கப்பட அவர் கூறும்போது, “கொஞ்சம் வேகமாக பந்துகள் வந்து ஸ்விங் ஆனால் அவ்வளவுதான் இந்திய வீரர்கள் உடனே சமாதான வெள்ளைக்கொடியை ஆட்டத் தொடங்கி விடுவார்கள்.

இந்திய அணி உலகக் கோப்பையை மட்டுமே குறிவைத்துள்ளது. அவர்களது கிரிக்கெட் நாட்காட்டியில் அதுவே மிகப்பெரிய தொடராகும். டெஸ்ட் தொடரும் பெரிய தொடர்தான் ஆனால் உலகக் கோப்பையில் நன்றாக விளையாடிவிட்டால் டெஸ்ட் தோல்விகள் பற்றி அதிக கவன ஈர்ப்பு இருக்காது.

இந்தியா போல் இங்கும் வந்து ஸ்பின்னர்களைக்கொண்டு ஆஸ்திரேலியாவை மடக்க அவர்கள் நினைத்தால், ஆஸி. பேட்ஸ்மென்கள் அவர்களை அடித்து நொறுக்குவது உறுதி.

முதலில் பிரிஸ்பனில் விளையாடுகின்றனர். அங்கு ஷேன் வார்ன் தவிர வெற்றியை ருசித்த ஸ்பின்னர்கள் உலகில் இல்லை. அடிலெய்டில் இந்தியாவுக்கு பரவாயில்லையாக அமையும், ஆனால் சிட்னி சமீப காலங்களாக வேகப்பந்து சாதக ஆட்டக்களமாகவே திகழ்கிறது.

அஸ்வின் வருகிறார். ஆனால் அவர் இந்திய பிட்ச்களில் சிறப்பாக வீசுகிறார். இங்கு கடினம்” என்று ஸ்டூவர்ட் கிளார்க் கூறியதை இந்தப் பத்தி மேற்கோள் காட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x