Published : 02 Aug 2014 12:00 AM
Last Updated : 02 Aug 2014 12:00 AM

2016 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறப் போவது யார்? - தேமுதிக எம்எல்ஏ-வுக்கு முதல்வர், அமைச்சர்கள் காரசார பதில்

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏ.க்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் காரசாரமாக பதில் அளித்தனர். தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் தேமுதிக உறுப்பினர்களுக்கு மோதல் ஏற்பட்டது. மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ அருள் செல்வன் பேசும்போது பிரச்சினை எழுந்தது. அதன் விவரம் வருமாறு:

அருள் செல்வன் (தேமுதிக): எங்களுக்கு வாய்ப்பளித்த கேப்டனுக்கு (விஜயகாந்த்துக்கு) நன்றி.

பேரவைத் தலைவர்: உங்கள் தொகுதியில் கல்லூரி தொடங்க முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவருக்கும் நன்றி சொல்லுங்கள்.

அருள்செல்வன்: நான் சொல்வதற்குள் நீங்கள் பேசிவிட்டீர்கள்.

முதல்வர் (குறுக்கிட்டு): இந்த அறிவிப்பு வெளியிட்ட போது யாரும் நன்றி சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளையும் அ.தி.மு.க. தொகுதிகளாகத்தான் நான் கருதுகிறேன். அது மட்டுமல்ல. மயிலாடுதுறை தொகுதியை உறுப்பினர் சொந்தம் கொண்டாடுகிறார். வரும் 2016–ஆம் ஆண்டு தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக போட்டியிட்டு வெல்லப் போவது திண்ணம்.

அருள்செல்வன்: 2016 தேர் தலில் மயிலாடுதுறை தொகுதியில் வெல்லப்போவதாக முதல்வர் கூறினார். புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு இரண்டு முறை தொடர்ந்து யாரும் வெற்றி பெற்றதில்லை.

(அப்போது அதிமுக உறுப் பினர்கள் பின்வரிசையில் இருந்து குரல் எழுப்பினர். அதற்கு தேமுதிக கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட அக்கட்சி உறுப்பினர்கள் எழுந்து கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்)

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 44.3 சதவீதம் வாக்கு களை தனி ஆளாக நின்று வெற்றி பெற்றவர் அம்மா.

அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் மோகன்ராஜ் (தே.மு.தி.க) எழுந்து தேர்தல் அதிகாரி தொடர்பாக கூறிய கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

அமைச்சர் நத்தம் விசுவநாதன்: தேர்தல் கமிஷனை குறை கூற உறுப்பினருக்கு உரிமை இல்லை. ஒரு கட்சி ஒரு முறை டெபாசிட் இழக்கலாம். ஆனால் உங்கள் கட்சி தொடர்ந்து டெபாசிட் இழக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் உங்கள் கட்சியின் சாயம் வெளுத்தது. இடைத் தேர்தலில் உங்கள் கட்சி தோற்றது. நாடாளுமன்ற தேர்தலில் 14 இடங்களில் 10–ல் டெபாசிட் போனது. இப்போது எந்த அடிப்படையில் இவர் பேசு கிறார் என்று தெரியவில்லை.

அமைச்சர் எஸ்.பி.வேலு மணி: எங்கள் அம்மா தமிழ் நாட்டில், தனித்து நின்று பிரச்சாரம் செய்தார். ஆயினும் 2 லட்சம், 3 லட்சம் ஓட்டு வித்தியாசங்களில் அ.தி.மு.க. வினர் வெற்றி பெற்றுள்ளனர்.

அமைச்சர் வைத்திலிங்கம்: தமிழ்நாட்டில் இருக்கிற அரசியல் கட்சிகளுக்கு நெஞ்சிலே தைரியம் இருந்தால் வரும் தேர்தலிலே தனித்து நிற்க தயாரா? எங்கள் அம்மாவை தவிர யாருக்கும் அந்த துணிவு உண்டா?

முதல்வர் ஜெயலலிதா: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து நின்று போட்டியிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 217 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற் றுள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அருள்செல்வன் (தே.மு.தி.க.): அரசியல் வரலாற்றில் ஒரு கட்சிக்கு வெற்றி, தோல்வி மாறி, மாறி வரும்.

அமைச்சர் விசுவநாதன்: ஒரு கட்சிக்கு வெற்றி வருவதுண்டு. ஆனால் உங்கள் கட்சி தோல்வி யையே தொடர்ந்து பெற்று வருகிறது.

அமைச்சர் காமராஜ்: 2011 சட்டசபை தேர்தலில் மயிலாடு துறை தொகுதியில் முதல்வர் வாக்கு கேட்டதால்தான் இன்று நீங்கள் எம்எல்ஏ ஆகியிருக் கிறீர்கள்.

அருள் செல்வன்: எங்கள் அன்பு தலைவரும் (விஜயகாந்த்) ஓட்டு கேட்டார்.

அமைச்சர் வைத்திலிங்கம்: 2011 தேர்தலில் உங்களது ஆதரவில் நாங்கள் வெற்றி பெறவில்லை. நீங்கள்தான் அம்மா வின் ஆதரவில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் நிரூபணமாகியுள்ளது.

அருள் செல்வன்: 2016–ஆம் ஆண்டு தேர்தல் பற்றி முதல்–அமைச்சர் பேசினார். யார்யாரோடு கூட்டணி. வெற்றி யாருக்கு என்பதெல் லாம் நிச்சயமாக தெரிந்து விடும். நான் பேசும்போது இடையூறு செய்யவேண்டும் என்று அமைச்சர்கள் குறுக்கீடு செய்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x