Published : 04 Apr 2014 12:43 PM
Last Updated : 04 Apr 2014 12:43 PM
தருமபுரி தொகுதியில் பாமக இளைனர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தாக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீது நடத்தப்பட்டத் தாக்குதலை சாதாரணமான ஒன்றாக கருத முடியாது. அவரை படுகொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டே இக்கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
சாலையில் வேகத்தடை அமைந்துள்ள பகுதியில், மருத்துவர் அன்புமணி இராமதாசுவின் ஊர்தி குறைந்த வேகத்தில் வந்து கொண்டிருந்த நேரத்தில், சாலையோர விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் பதுங்கியிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட வன்முறை கும்பல் சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
சதிகாரர்களின் திட்டப்படி எல்லாமே நடந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியாத மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சியினர் சாதாரண சாலை மறியல் செய்தால்கூட அவர்களை கொத்துக்கொத்தாக கைது செய்யும் காவல்துறையினர், இதற்கு காரணமான சமூகவிரோதிகளை கைது செய்து, அதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்களை சீர்குலைக்க வேண்டும்; மருத்துவர் அன்புமணி இராமதாசுவின் உயிரைப் பறிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் இத்தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் இதற்கு பின்னணியில் இருந்து தூண்டிவிட்டவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரத்தில், பாட்டாளி மக்கள் கட்சியினர் தொடர்ந்து அமைதிகாக்க வேண்டும்; எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT