Published : 14 Apr 2014 09:05 AM
Last Updated : 14 Apr 2014 09:05 AM

தமிழர்கள் இல்லந்தோறும் இன்பமும் இனிமையும் பொங்கட்டும்: ஆளுநர், முதல்வர் புத்தாண்டு வாழ்த்து

சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டையொட்டி மக்களுக்கு ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் கே.ரோசய்யா:

‘‘இந்த சித்திரைத் திருநாளில் அமைதி, முன்னேற்றம், வளமான வாழ்வு மற்றும் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெற புத்தாண்டு வழிகாட்டட்டும். அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கி றேன்’’ என்று கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா:

சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை கொண்டாடி மகிழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி’ என்னும் பழமையும் இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள், சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங்காலமாய்க் கொண்டாடி மகிழ்கின்றனர்.

புதிய தமிழ் ஆண்டில் அடி யெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும். அனைத்து வளமும் பெருகும் வகையில் நம் தாய்த் தமிழ்நாட்டை மேலும் உயர்த்திட இந்த இனிய திருநாளில் உறுதியேற்போம். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x