Published : 13 Apr 2014 05:01 PM
Last Updated : 13 Apr 2014 05:01 PM

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் மானவ்ஜித் சிங்

அமெரிக்காவின் துஸ்கான் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஆடவர் டிராப் பிரிவில் இந்திய வீரர் மானவ்ஜித் சிங் சாந்து தங்கம் வென்றார்.

வெள்ளிக்கிழமை நடை பெற்ற ஆடவர் டிராப் பிரிவு துப்பாக்கி சுடுதலில் மானவ்ஜித் சிங் தகுதிச்சுற்றில் 121 முறை யும், இறுதிச்சுற்றில் 13 முறையும் துல்லியமாகச் சுட்டார். இதன் மூலம் இரு முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவின் மைக்கேல் டைமன்டை பின்னுக்குத்தள்ளி தங்கம் வென்றார் மானவ்ஜித். இவர் தனது அரையிறுதியில் 15 வாய்ப்புகளில் 14 முறை மிகச்சரியாக சுட்டார்.

1996 அட்லாண்டா ஒலிம்பிக், 2000 சிட்னி ஒலிம்பிக் ஆகியவற்றில் சாம்பியனான மைக்கேல் டைமன்ட், காமன்வெல்த் போட்டியில் 5 முறை தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். ஆனால் அவர் தகுதிச்சுற்றில் 119 முறையும், இறுதிச்சுற்றில் 9 முறையும் மட்டுமே சரியாக சுட்டார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. இதேபிரிவில் ரஷியாவின் அலெக்ஸி அலிபோவ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெற்றி குறித்துப் பேசிய மானவ்ஜித் சிங், “இந்தப் போட்டி யில் பங்கேற்ற அனைவருமே உலகின் தலைசிறந்த வீரர்கள். மைக்கேல் டைமன்டை வீழ்த்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனினும் இறுதியில் வெற்றி கண்டிருக்கிறேன். நான் குளிர்காலம் முழுவதும் இந்தப் போட்டிக்காக தீவிர மாகத் தயாரானேன். கடந்த மாதத்தில் மட்டும் ஏராளமான போட்டிகளிலும், பயிற்சியிலும் பங்கேற்றேன். துப்பாக்கி சுடுதலை நிறுத்தவேயில்லை” என்றார்.

மானவ்ஜித் சிங் தற்போது சர்வதேச தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ளார். 2012-ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தகுதிச்சுற்றில் 16-வது இடத்தைப் பிடித்த மானவ்ஜித், இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

அடுத்ததாக காமன்வெல்த் போட்டி, உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டி என பல்வேறு முக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் உலக கோப்பை போட்டியில் மானவ்ஜித் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அவருக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x