Last Updated : 12 Feb, 2015 11:58 AM

 

Published : 12 Feb 2015 11:58 AM
Last Updated : 12 Feb 2015 11:58 AM

டெல்லி துணை முதல்வராகிறார் மணிஷ் சிசோதியா: கட்சி வட்டாரம் தகவல்

டெல்லி துணை முதல்வராக மணிஷ் சிசோதியாவை நியமிக்க ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

வரும் 14-ம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில், டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்கிறார். இந்நிலையில், தனது நம்பிக்கைக்கு பாத்திரமான மணிஷ் சிசோதியாவை துணை முதல்வராக நியமிக்க கேஜ்ரிவால் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு கவுசாம்பி நகரில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

மேலும், அமைச்சரவையில் இடம் பெறப்போவது யார் என்ற பட்டியலும் கிட்டத்தட்ட தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யேந்திர ஜெயின், ஆதர்ஷ் சாஸ்திரி, சவுரவ் பரத்வாஜ், ஜிதேந்திர தோமர், கபில் மிஸ்ரா, சந்தீப் குமார், ஆசும் அகமது கான் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சட்டப்பேரவை சபாநாயகராக ராம் நிவாஸ் கோயல், துணை சபாநாயகராக பந்தனா குமாரியும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை ஆம் ஆத்மி கட்சி 49 நாட்களில் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது. அப்போதைய ஆட்சியில் மணிஷ் சிசோதியா கல்வி, பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அமைச்சராக இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x