Published : 20 Feb 2015 02:48 PM
Last Updated : 20 Feb 2015 02:48 PM

சமரச முயற்சியால் லிங்கா போராட்டம் ஒத்திவைப்பு: ரஜினியை சந்திக்கிறார் சரத்குமார்

'லிங்கா' விநியோகஸ்தர்களிடம் நடிகர் சரத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

'லிங்கா' தரப்பில் 10% நஷ்ட ஈடு தொகையை ஏற்க மறுத்து விநியோகஸ்தர்கள் தரப்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவுக் கோரி வந்தனர்.

இதனிடையே, அந்தப் போராட்டம் நடைபெறும் அதேநாளில் எதிர் போராட்டத்தை நடத்த ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் 'லிங்கா' விநியோகஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்பேச்சுவார்த்தையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பங்கேற்று விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்தப் பேச்சுவார்த்தையில், முதலில் என்ன நடந்தது என்பதை விநியோகஸ்தர்கள் தரப்பில் எடுத்துரைத்தார்கள். தங்களுக்கு ரூ.33 கோடி நஷ்டம் என்று கூறப்பட்டது. அதற்கு சரத்குமார் ரூ.33 கோடியை எவ்வளவு உங்களால் குறைத்து கொள்ள முடியும் என்று சரத்குமார் கேட்டார்.

அதற்கு ரூ.8 கோடி எங்களால் குறைத்துக் கொள்ள முடியும். கண்டிப்பாக ரூ.25 கோடி வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கூறினார்கள்.

என்னுடைய 'சண்டமாருதம்' வெளியாகிறது. திங்கள்கிழமை ரஜினியை சந்தித்து பேசிவிட்டு உங்களை அன்றைய தினமே நல்ல முடிவோடு சந்திக்கிறேன் என்று சரத்குமார் கேட்டுள்ளார். அதற்கு விநியோகஸ்தர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தையின் முடிவில், எங்களால் இன்னும் ரூ.3 கோடியைக் கூட குறைத்துக் கொள்ள முடியும். ஆனால், ரூ.22 கோடியில் இருந்து குறைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் இறுதியாக தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இப்பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதால், விநியோகஸ்தர்களின் பிச்சை எடுக்கும் போராட்டம் தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சரத்குமார் என்ன சொல்லவிருக்கிறார் என்பது குறித்து விநியோகஸ்தர்கள் அடுத்த கட்டம் என்ன என்பதை முடிவு செய்யவிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x