Published : 21 Jan 2015 10:09 AM
Last Updated : 21 Jan 2015 10:09 AM

சென்னை: லாரி மோதி சிக்னலுக்காக காத்திருந்த 4 பேர் பலி

சென்னையை அடுத்த பாடி அருகே லாரி மோதியதில், சிக்னலுக்காக காத்திருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சென்னை நூறடி சாலை பாடி மேம்பாலம் செந்தில்நகர் போலீஸ் பூத் அருகே போக்குவரத்து சிக்னல் உள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் அந்த சிக்னலில் ஏராளமானோர் வாகனங்களில் சிக்னலுக்காக காத்திருந்தனர். அப்போது பாடியில் இருந்து ரெட்டேரி நோக்கி வேகமாக வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சிக்னலுக்காக மோட்டார் சைக்கிளில் காத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி நிஷா பர்வீன் என்ற இளம்பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதைப் பார்த்த லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினார். இறந்தவர்கள் 4 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள். 3 பேரின் விவரம் இரவு 9 மணி வரை தெரியவில்லை. அவர்களின் செல்போன், பர்சில் இருந்த அடையாளங்களை வைத்து அவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

முன்னதாக, விபத்து குறித்து அறிந்ததும், வில்லிவாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தில் காயமடைந்த மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், லாரியை ஓட்டிவந்த யானைக்கவுனியைச் சேர்ந்த விக்னேஷை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை அப்புறப்படுத்தும் போலீஸார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x